ADDED : பிப் 15, 2024 05:34 AM
பெங்களூரு : அயோத்தி ராமரை தரிசிக்க, பா.ஜ., தொண்டர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு ரயில், பெங்களூரில் இருந்து நேற்று புறப்பட்டது.
உத்தர பிரதேசம், அயோத்தியில் ஜனவரி 22ல் ராமர் கோவில் திறப்பு விழா நடந்தது. தற்போது தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள், ராமர் கோவிலை தரிசிக்க செல்கின்றனர்.
கர்நாடகாவில் இருந்து செல்லும் பக்தர்களின் வசதிக்காக, தென்மேற்கு ரயில்வேத் துறை பெங்களூரு, ஹூப்பள்ளி, மங்களூரு, மைசூரு என, பல நகரங்களில் இருந்து, அயோத்திக்கு சிறப்பு ரயில் இயக்குகிறது.
லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் பா.ஜ., தன் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், 'அயோத்தி ஸ்ரீராமர் தரிசனம்' என்ற பெயரில், சிறப்பு ரயில் இயக்குகிறது.
பா.ஜ., தொண்டர்களுடன் முதல் ரயில் நேற்று புறப்பட்டது. பெங்களூரின், விஸ்வேஸ்வரய்யா ரயில் நிலையத்தில் இருந்து, நேற்று அதிகாலை 3:40 மணிக்கு புறப்பட்ட ரயிலில், 1,450 பேர் பயணித்தனர்.
ரயில் நாளை 16ம் தேதி மதியம், திருத்தலமான அயோத்தியை ரயில் அடையும். பா.ஜ., தொண்டர்கள் ஸ்ரீராமரை தரிசனம் செய்வர். மறுநாள் காலை பிப்ரவரி 17ல், ரயில் அயோத்தியில் இருந்து புறப்படும்.
பிப்ரவரி 20 காலை பெங்களூரை அடையும். பெங்களூரின் மூன்று லோக்சபா தொகுதிகளின், 1,450 தொண்டர்கள் ராமரை தரிசித்துதிரும்புவர்.

