'வீட்டில் டார்ச்சர் செய்றாங்க உதவுங்க ப்ளீஸ்' கண்ணீர்விட்டு கதறிய பாலிவுட் நடிகை
'வீட்டில் டார்ச்சர் செய்றாங்க உதவுங்க ப்ளீஸ்' கண்ணீர்விட்டு கதறிய பாலிவுட் நடிகை
UPDATED : ஜூலை 24, 2025 12:38 AM
ADDED : ஜூலை 24, 2025 12:29 AM

மும்பை: 'என் சொந்த வீட்டில், கடந்த ஏழு ஆண்டுகளாக பாதுகாப்பின்றி, பல்வேறு தொல்லைகளுடன் வாழ்ந்து வருகிறேன்; யாராவது உதவுங்கள்' என, ஹிந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்து உள்ளார்.
கடந்த 2005ல் வெளியான ஆஷிக் பனாயா ஆப்னே என்ற ஹிந்தி படத்தில் அறிமுகமானவர் தனுஸ்ரீ தத்தா.
அதன் பின் பல்வேறு ஹிந்தி படங்களிலும், தமிழில் விஷால் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை படத்திலும் இவர் நடித்துள்ளார்.
'மீ டூ'
மஹாராஷ்டிராவின் மும்பையில் வசித்து வரும் தனுஸ்ரீ, 2018ல், பிரபல ஹிந்தி நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் அளித்திருந்தார்.
நாட்டிலேயே முதன்முறையாக 'மீ டூ' பெயரில் பாலியல் புகாரை தெரிவித்தது இவர்தான். விசாரணையில், நானா படேகர் குற்றமற்றவர் என நிரூபணமானது.
பாலியல் புகாரைத் தொடர்ந்து, படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த தனுஸ்ரீ, தற்போது தன் சமூக வலைதள பக்கத்தில் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை நேற்று முன்தினம் வெளியிட்டார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
'மீ டூ-'வில் பாலியல் புகார் கூறியது முதல், ஏழு ஆண்டுகளாக நான் தொடர்ந்து துன்புறுத்தப்படுகிறேன்.
என் வீட்டிலேயே நான் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறேன். இது குறித்து போலீசாரிடம் தெரிவித்தேன், நேரில் வந்து புகார் தெரிவிக்குமாறு கூறியுள்ளனர்.
இன்று என் உடல்நிலை சரியில்லை. தொடர் துன்புறுத்தலால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளேன். என் வீட்டில் என்னால் வேலை கூட செய்ய முடியவில்லை. வீட்டுக்கு தேவையான வேலையாட்களைக் கூட என்னால் பணியமர்த்த முடியவில்லை. 'அவர்களாகவே' எனது வீட்டில் வேலையாட்களை பணியமர்த்தியுள்ளனர்.
அவர்கள் அனுப்பிய ஆட்கள் என் வீட்டில் பொருட்களைத் திருடிச் செல்கின்றனர். எனது வேலைகளை நானே செய்ய வேண்டியுள்ளது. என் சொந்த வீட்டிலேயே எனக்கு நேரும் துன்புறுத்தலில் இருந்து தயவுசெய்து என்னை யாரேனும் காப்பாற்றுங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சத்தம்
'அவர்களால்' துன்புறுத்தப்படுகிறேன் என சொன்னாலும், யார் அந்த நபர்கள் என்பதை தனுஸ்ரீ தத்தா வெளிப்படையாக கூறவில்லை.
பயங்கர சத்தங்களுடன் அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், 'என் வீட்டில் அன்றாடம் இப்படியான சத்தங்கள் கேட்கின்றன.
'மேல்தளத்திலிருந்தும், வாயில் கதவுப் பக்கம் இருந்தும் இந்த சத்தங்கள் வருகின்றன. இது போன்ற தொடர் துன்புறுத்தல்களால் நான் மிகவும் சோர்வடைந்துள்ளேன்' என, குறிப்பிட்டு உள்ளார்.

