ADDED : ஜன 24, 2026 05:49 AM
நொய்டா:டில்லி அருகே உள்ள நொய்டா நகரில் செயல்படும், தனியார் பள்ளிக்கு நேற்று காலையில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து, அந்த பள்ளிக்கு விரைந்த வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தினர். இதில், வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த செய்தி, புரளி என்பது தெரிய வந்தது.
நொய்டா நகரம் மட்டுமின்றி, டில்லியின் பல பள்ளிகளுக்கு, வெடிகுண்டுகள் வைத்திருப்பதாக, இ - மெயில் வாயிலாக மிரட்டல் விடுக்கப்பட்டு வந்தது. கடந்த வாரத்திற்கு முன் வரை, தினமும் டில்லி மற்றும் சுற்றியுள்ள பல தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு இ - மெயிலில் மிரட்டல் விடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், நொய்டா நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றுக்கு, நேற்று காலை வந்த இ - மெயிலில், அந்த பள்ளியில் வெடிகுண்டுகள் வைத்திருப்பதாக, மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
அதையடுத்து, அந்த பள்ளிக்கு நொய்டா நகரின் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர். நீண்ட நேரம் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில், வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதையடுத்து, அந்த பள்ளிக்கு வந்த மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. எனினும், எங்கிருந்து அந்த மிரட்டல் வந்தது என்பது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

