ADDED : மார் 10, 2024 06:31 AM
பெலகாவி: பெலகாவி அருகே நிப்பானியில் 101 ஆண்டு பழமையான, ராமர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இதனால் கோவிலுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
பெலகாவி அருகே நிப்பானியில் 101 ஆண்டு பழமையான ராமர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வளாகத்தில் இருந்து, இரண்டு நாட்களுக்கு முன்பு, ஹிந்தி, உருது மொழியில் எழுதப்பட்ட இரண்டு கடிதங்கள் கண்டெடுக்கப்பட்டன.
அந்த கடிதத்தில், 'அயோத்தியில் ராமர் கோவில் கட்டி ஸ்ரீராம் கோஷத்தை எழுப்பி, நாடு முழுவதும் எங்கள் சமூகத்தை கேலி செய்கிறீர்கள். இதை பார்த்து நாங்கள் ஏன் அமைதியாக இருக்க வேண்டும்? வரும் 20, 21ம் தேதிக்குள், இந்த கோவிலை வெடிக்க செய்வோம்' என்று எழுதப்பட்டு இருந்தது.
இதுகுறித்து, கோவில் நிர்வாகம் அளித்த புகாரில், நிப்பானி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
“கோவிலை சுற்றி, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கோவில் வளாகத்தில் 14 கண்காணிப்பு கேமராக்கள், பொருத்தப்பட்டு இருக்கின்றன. வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தால், மாநிலத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும், பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,” என, அறநிலைய அமைச்சர் ராமலிங்கரெட்டி கூறி உள்ளார்.
