ADDED : அக் 26, 2024 12:49 AM

திருப்பதி :திருப்பதியில் உள்ள நான்கு தனியார் ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபகாலமாக பள்ளிகள் மற்றும் விமானங்களுக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள நான்கு தனியார் ஹோட்டல்களுக்கு, சமூக வலைதளங்கள் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இது தொடர்பாக அனுப்பப்பட்ட இ - மெயிலில், போதைப்பொருள் வழக்கில் கைதான தமிழகத்தைச் சேர்ந்த ஜாபர் சாதிக் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த ஹோட்டல் நிர்வாகத்தினர், உடனே போலீசுக்கு தகவல் அளித்தனர்.
இதனால், ஹோட்டல்களில் தங்கியிருந்த மக்கள் பதறியடித்து வெளியேறினர். இதற்கிடையே, சம்பந்தப்பட்ட ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சென்று சோதனை நடத்தினர்.
இதன் முடிவில், வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பது தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.