ADDED : ஜன 30, 2026 04:30 AM
புதுடில்லி: டில்லியில் ஐந்து பள்ளிகளுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதேபோல, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் தலைமை செயலக கட்டடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக, டில்லி தீயணைப்பு படையினர் கூறியதாவது:
டில்லி சித்தரஞ்சன் பார்க்கில் உள்ள டான்பாஸ்கோ பள்ளி, ஆனந்த் நிகேதன் மற்றும் துவாரகாவில் உள்ள கார்மெல் கான்வென்ட் உள்ளிட்ட ஐந்து பள்ளிகளுக்கு நேற்று காலை, 8:30 மணி அளவில், இ - மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இதுபற்றிய தகவல் எங்களுக்கு கிடைத்ததும், நாங்களும், போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் இணைந்து, மோப்ப நாய்கள் உதவியுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் உள்ள மாணவர்களை வெளியேற்றி விட்டு, வெடிகுண்டுகள் எதுவும் உள்ளனவா என தீவிர சோதனை நடத்தினோம்.
அந்த சோதனைகளில், சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.
வெடிகுண்டு மிரட்டல் எங்கிருந்து வந்தது என கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் துவாரக கோர்ட் வளாகத்திற்கு இதேபோல, வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு தீயணைப்பு படையினர் கூறினர்.
இதேபோல, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் தலைமை செயலக கட்டடங்களுக்கும் நேற்று இ - மெயில் வாயிலாக, வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
உடனே தலைமை செயலக ஊழியர்களை வெளியேற்றி விட்டு, போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் சோதனை நடத்தினர்.
சோதனையில் சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் எதுவும் சிக்காததால், வெடிகுண்டு மிரட்டல் புரளி என, தெரியவந்தது.

