ADDED : அக் 28, 2024 02:08 AM

லக்னோ: திருப்பதியை தொடர்ந்து, உத்தர பிரதேசத்தின் லக்னோவில் உள்ள 10 சொகுசு ஹோட்டல்களுக்கு, இ - மெயில் வாயிலாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில், ஆந்திராவின் திருப்பதியில் உள்ள நான்கு சொகுசு ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீசார் நடத்திய சோதனைக்குபின் அது வதந்தி என தெரிய
வந்தது.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் லக்னோவில் உள்ள மரியாட்,
பார்டூன், லெமன் ட்ரீ உட்பட 10 சொகுசு ஹோட்டல்களுக்கு இ - மெயில் வாயிலாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர்.
இதில், 'உங்கள் ஹோட்டல் வளாகத்தில் கருப்பு நிற பையில் வெடிகுண்டுகளை மறைத்து வைத்துள்ளேன். எனக்கு, 46.24 லட்சம் ரூபாய் அளிக்காவிட்டால், அவற்றை வெடிக்க செய்துவிடுவேன் 'அந்த வளாகம் முழுதும் ரத்தக்கறை படியும். வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் முயற்சியில் ஈடுபட்டாலும், அவற்றை வெடிக்க செய்துவிடுவேன்' என குறிப்பிடப்பட்டிருந்தது.
அதிர்ச்சி அடைந்த ஹோட்டல் நிர்வாகிகள், போலீசாருக்கு உடனே தகவல் அளித்தனர்.
இதையடுத்து, மிரட்டல் விடுக்கப்பட்ட ஹோட்டல்களில், வெடிகுண்டு செயலிழப்பு குழுவினருடன் போலீசார் சோதனையிட்டனர். இதில், வெடிகுண்டுகள் எதுவும் கிடைக்காததால், மிரட்டல் வெறும் வதந்தி என தெரியவந்தது.