லோக்சபா, ராஜ்யசபா இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
லோக்சபா, ராஜ்யசபா இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
ADDED : டிச 09, 2024 04:28 PM

புதுடில்லி: எதிர்க்கட்சிகளின் அமளியால், இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நவ. 25ல் தொடங்கியது. இதில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல் உள்பட மசோதாக்கள் குறித்து விவாதிக்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.
கூட்டத்தொடரின் முதல் நாளே எதிர்க்கட்சிகள், அதானி விவகாரம் குறித்து பரவலாக பேசத் தொடங்கினர். கடந்த வாரம் முழுவதும் இரு அவைகளும் முடங்கிய நிலையில் இந்த வாரத்தின் முதல் நாளான இன்று இரு அவைகளும் தொடங்கின.
முற்பகல் 11 மணிக்கு தொடங்கிய லோக்சபாவில் அதானி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் நண்பகல் 12 மணி வரை அவை ஒத்தி வைக்கப்படுவதாக அவைத் தலைவர் அறிவித்தார். மேலும், ஹங்கேரி - அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் உடைய நிதி அளிக்கும் அமைப்புகளுடன் சோனியாவுக்கு தொடர்பு உள்ளதாக பா.ஜ., குற்றஞ்சாட்டியது. மேலும், காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பியதால் லோக்சபா ஒத்தி வைக்கப்பட்டது.
எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் லோக்சபா மற்றும், ராஜ்யசபா பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னரும் எதிர்கட்சிகள் தொடர்ந்து கூச்சல், குழப்பங்களை ஏற்படுத்தியதால், பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதை தொடர்ந்து மேலும், அதானி மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மோடி, அதானிக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.
இந்நிலையில் அவை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்படுவதாக லோக்சபா மற்றும் ராஜ்யசபா தலைவர்கள் அறிவித்தனர்.