ADDED : ஜூன் 17, 2025 08:20 PM
சண்டிகர்:ஹரியானாவில், 'மாடலிங்' இளம்பெண் கொலை வழக்கில், அந்தப் பெண்ணின் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, இரண்டு குழந்தைகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
ஹரியானா மாநிலம் பானிபட்டில் தன் சகோதரியுடன் வசித்தவர் ஷீத்தல் என்ற சிம்மி. 'மியூசிக் வீடியோ' மாடலாகப் பணியாற்றினார். கடந்த, 14ம் தேதி படப்பிடிப்புக்காக சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது சகோதரி கொடுத்த புகார்படி, பானிபட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
இந்நிலையில், சோனிபட் கார்கோடா கால்வாயில் ஷீத்தல் உடல் கண்டெடுக்கப்பட்டது. ஷீத்தல் ஒரு ஆணுடன் காரில் கார்கோடா வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது. தீவிர விசாரணை நடத்திய தனிப்படை போலீசார், ஷீத்தலின் காதலர் சுனில் என்பவரை கைது செய்தனர்.
போலீசாரிடம் சுனில் அளித்த வாக்குமூலம்:
கடந்த, 14ம் தேதி பானிபட் அருகே அஹார் கிராமத்தில் படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு சென்று ஷீத்தலை சந்தித்தேன். எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருப்பதை அறிந்து என்னுடன் கடும் வாக்குவாதம் செய்தார். சமரசம் செய்து காரில் கார்கோடாவுக்கு அழைத்து வந்தேன். காருக்குள்ளேயே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவளை அடித்தேன். உடனே, சகோதரிக்கு போன் செய்து நான் அடிப்பதைக் கூறினார். கால்வாய் அருகே வந்தவுடன் நான் மட்டும் இறங்கினேன். பின், காரை கால்வாய்க்குள் தள்ளி விட்டேன். நானுக் கால்வாயில் குதித்து நீந்தி விட்டு கரை ஏறி, மருத்துவமனையில் சேர்ந்தேன். கார் கால்வாயில் கவிழ்ந்து விட்டதாக கூறி தப்பிக்க நினைத்தேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஷீத்தலுக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி, கணவரிடமிருந்து பிரிந்து வசித்தார்.