எனக்கு அப்பவே தெரியும்; எல்லாம் காங்கிரஸ் செய்த சதி; மவுனம் கலைத்தார் பிரிஜ் பூஷன்!
எனக்கு அப்பவே தெரியும்; எல்லாம் காங்கிரஸ் செய்த சதி; மவுனம் கலைத்தார் பிரிஜ் பூஷன்!
UPDATED : செப் 07, 2024 12:04 PM
ADDED : செப் 07, 2024 09:19 AM

புதுடில்லி: 'தனக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு எழுவதற்கு காங்கிரஸ் தான் காரணம்' என இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் தெரிவித்தார்.
ஹரியானாவை சேர்ந்த மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, 30. அதே மாநிலத்தை சேர்ந்த வீராங்கனை வினேஷ் போகத், 30. இவர்கள் இருவரும், வேறு சில வீரர்கள், வீராங்கனைகளுடன் சேர்ந்து, இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவரும், பா.ஜ., முன்னாள் எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது, பாலியல் புகார் எழுந்த போது, போராட்டம் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, பிரிஜ் பூஷன் மீண்டும் பதவிக்கு வர முடியவில்லை.
இந்நிலையில், பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் இருவரும் காங்கிரஸ் கட்சியில் நேற்று அதிகாரப்பூர்வமாக இணைந்தனர். வினேஷ் காங்கிரஸ் சார்பில் தேர்தலிலும் போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் சதி!
இது தொடர்பாக, பிரிஜ் பூஷன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்த விளையாட்டு வீரர்கள் ஜனவரி 18ம் தேதி ஒரு சதித்திட்டத்தை துவங்கினர். அப்போது இது எல்லாம் ஒரு அரசியல் சதி என்று நான் சொன்னேன். இதில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது என்றும் கூறினேன்.
முன்னாள் முதல்வர் பூபிந்தர் ஹூடாவும், அவரது மகன் தீபேந்தர் ஹூடாவும் இதில் ஈடுபட்டுள்ளனர். சதித்திட்டத்துக்கான முழு ஸ்கிரிப்டும் அவர்களால் தான் எழுதப்பட்டது. இது விளையாட்டு வீரர்களின் போராட்டம் அல்ல, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த நாடகத்தில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது என்பது தெளிவாகியுள்ளது.
தோற்கடித்தேன்!
கடந்த 2012ம் ஆண்டு நடந்த இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தலில் நான் தீபேந்தர் ஹூடாவை தோற்கடித்தேன்.இதுவே என் மீது அவர்களுக்கு வெறுப்பு ஏற்பட முக்கிய காரணம்.
ராம ஜென்மபூமி போராட்டத்தின் போது, நான் இரண்டு முறை கைது செய்யப்பட்டேன். இது எல்லாம் அவர்களுக்கு தெரியும். அதனால் தான் என் மீது அவர்கள் திட்டமிட்டு அவதுாறு பரப்பினர்.
கடவுள் தண்டித்தார்!
ஒரு வீரர் ஒரே நாளில் இரண்டு எடை பிரிவு போட்டியில் பங்கேற்றது எப்படி என வினேஷ் போகத்திடம் கேட்க விரும்புகிறேன். நீங்கள் மல்யுத்தத்தில் வெற்றி பெறவில்லை. ஏமாற்றி தான் பைனல் வரை சென்றீர்கள். அதற்காக தான் கடவுள் உங்களை தண்டித்துள்ளார்.விளையாட்டு துறையில் ஹரியானா மாநிலம் இந்தியாவின் கிரீடம். எந்த தகுதி அடிப்படையில் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பஜ்ரங் புனியா பங்கேற்றார். மல்யுத்தத்தில் நிபுணத்துவம் பெற்றவர்களை நான் கேட்க விரும்புகிறேன்.இவ்வாறு பிரிஜ் பூஷன் தெரிவித்தார்.