ADDED : ஜூன் 01, 2025 03:31 AM
கொல்கட்டா: மேற்கு வங்க மாநிலத்தில், சொந்த அண்ணியை கொடூரமாக கொன்ற மைத்துனர், துண்டிக்கப்பட்ட தலையுடன் சாலையில் நடந்து சென்று போலீசில் சரணடைந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ளது பசாந்தி கிராமம். இங்கு நேற்று காலை பிமல் மொண்டல் என்பவர், ஒரு பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலையை, ரத்தம் சொட்ட சொட்ட கையில் பிடித்தபடி சாலையில் சுற்றித்திரிந்தார்; கையில் கூர்மையான கத்தியையும் வைத்திருந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். கத்தி வைத்திருந்ததால் பிமல் மொண்டலை யாரும் நெருங்கவில்லை.
சிறிது நேரத்திற்கு பின், அந்த நபர், அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று சரணடைந்தார்.
விசாரணையில், பிமல் மொண்டல் வெட்டிக் கொன்றது, அவரது அண்ணியான சதி மொண்டல் என்பது தெரியவந்தது. கடந்த சில நாட்களாகவே, பிமல் மொண்டலுக்கும், அவரது அண்ணன் குடும்பத்திற்கும் தகராறு இருந்து வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதனால், பிமல் மொண்டல் அவர்களை கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் அவர்கள் கூறினர். ஆனால், இது இவ்வளவு கொடூரமான கொலையில் முடியும் என்று நாங்கள் யாரும் நினைத்து பார்த்ததில்லை என்றும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.
துண்டிக்கப்பட்ட தலையுடன் திரிந்த பிமல், தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பழிவாங்கிவிட்டதாக கத்தியதாகவும் நேரில் பார்த்தவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். பிமல் மொண்டல் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.