வேலி தாண்டிய ஆட்டு மந்தை; வேண்டாம் என்கிறது பாகிஸ்தான்: எல்லையில் நீடிக்கும் தொல்லையால் பரிதவிக்கும் படை வீரர்கள்!
வேலி தாண்டிய ஆட்டு மந்தை; வேண்டாம் என்கிறது பாகிஸ்தான்: எல்லையில் நீடிக்கும் தொல்லையால் பரிதவிக்கும் படை வீரர்கள்!
ADDED : செப் 07, 2024 12:54 PM

ஜெய்ப்பூர்: வேலி தாண்டி, இந்திய எல்லைக்குள் புகுந்த ஆடுகளை என்ன செய்வது என்று தெரியாமல், எல்லைப் பாதுகாப்பு படையினர் பரிதவிக்கின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டம், இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. இரு நாட்டு எல்லையில் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேலி, ஒரு இடத்தில் சிறிய அளவில் சேதமடைந்துள்ளது. சந்து போல இருக்கும் அந்த இடைவெளியை பயன்படுத்தி, பாகிஸ்தான் எல்லைக்குள் மேய்ந்து கொண்டிருந்த 300க்கும் மேற்பட்ட ஆடுகள், இந்திய எல்லைக்குள் வந்து விட்டன.
ஜூலை 20ம் தேதி இந்த ஆடுகள் வந்து விட்டதை, அப்போதே எல்லை பாதுகாப்பு படையினர் கவனித்து, பாகிஸ்தான் எல்லையை பாதுகாக்கும் வீரர்களுக்கு போனில் தெரிவித்தனர். ஆனால், ஆடுகளை மீட்டுச்செல்வதற்கு அவர்கள் எந்த ஆர்வமும் காட்டவில்லை.
அதிகாரி சொல்வது என்ன?
இது குறித்து பி.எஸ்.எப்., அதிகாரி கூறியதாவது: எல்லையை ஒட்டி ஆடு மேய்ப்பது பற்றி ஏற்கனவே பாகிஸ்தானின் துணை ராணுவ படையினரை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளோம். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இப்போது ஆடுகள் வேலி சந்துக்குள் புகுந்து இந்தியா வந்து விட்டன. ஆடுகளை திரும்ப வாங்கவும் மறுக்கின்றனர்.
மீண்டும் ஒரு முறை!
இப்பிரச்னையை சமாளிக்க உதவும்படி தொண்டு நிறுவனத்தினரிடம் கேட்டோம். ஆனால் யாரும் முன் வரவில்லை. வேறு வழியின்றி உள்ளூர் ஆட்களை வைத்து நாங்களே ஆடு மேய்க்கிறோம். மீண்டும் ஒரு முறை பாகிஸ்தான் படையினரை கேட்போம். அப்போதும் அவர்கள் ஆடுகளை மீட்க வரவில்லை என்றால், சுங்கத்துறையினரிடம் ஒப்படைப்போம்.இவ்வாறு அதிகாரி தெரிவித்தார்.