ADDED : பிப் 07, 2024 01:02 AM
புதுடில்லி, பார்லிமென்டில் நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடர் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த மாதம் 31ம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்முவின் உரையுடன் துவங்கியது. அடுத்த நாள், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் கூட்டத் தொடரை வரும் 9ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், கூடுதலாக ஒரு நாள் பார்லி., இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பார்லி., விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், ''நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடர் மேலும் ஒரு நாள் இயங்கும். இதன்படி, வரும் 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், 'நம் நாட்டின் பொருளாதாரம் சீராக வளர்ச்சி அடைந்துஉள்ளது. கடந்த 2014ம் ஆண்டுக்கு முன், நம் நாட்டின் மேற்கொள்ளப்பட்ட தவறான பொருளாதார நடவடிக்கைகள் குறித்தும், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள பொருளாதார சீர்திருந்த நடவடிக்கைகள் குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்' என, அறிவித்திருந்தார்.
இந்த வெள்ளை அறிக்கையை, தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள இறுதி நாளான வரும் 10ம் தேதி, பார்லி.,யில் மத்திய அரசு தாக்கல் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது.

