ADDED : ஜன 29, 2025 02:28 AM

புதுடில்லி,பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் நாளை மறுதினம் துவங்க உள்ளது.
இதையொட்டி, நாளை நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டத்திற்கு எதிர்க்கட்சியினருக்கு பார்லிமென்ட் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அழைப்பு விடுத்துள்ளார்.
இரண்டு பகுதிகளாக நடக்கவுள்ள இந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளில், ஜனாதிபதி திரவுபதி முர்முவின் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்க உள்ளது.
அதற்கு அடுத்த நாளான, பிப்., 1ல், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து எட்டாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்.
இதைத்தொடர்ந்து, ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியும், பட்ஜெட் மீதான விவாதத்துக்கு நிர்மலா சீதாராமனும் பதிலளிப்பர்.
இதேபோல் ராஜ்யசபாவில், பிரதமர் மோடி பிப்., 6ம் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிப்ரவரி 13ம் தேதி முதல் கட்ட அமர்வு நிறைவடைகிறது. அதன்பின் சிறிய இடைவெளிக்கு பின் இரண்டாம் கட்ட அமர்வு, மார்ச் 10 முதல் ஏப்., 4ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது, பல்வேறு அமைச்சகங்களின் மானியங்களுக்கான கோரிக்கை மற்றும் பட்ஜெட் செயல்முறை மீதான விவாதங்கள் நடக்கும். இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 27 அமர்வுகள் நடக்கவுள்ளன.