குற்றம் சாட்டப்பட்டாலே வீடுகளை இடிப்பீர்களா?: உச்சநீதிமன்றம் கேள்வி
குற்றம் சாட்டப்பட்டாலே வீடுகளை இடிப்பீர்களா?: உச்சநீதிமன்றம் கேள்வி
ADDED : செப் 02, 2024 02:32 PM

புதுடில்லி: புல்டோசர் நடவடிக்கை குறித்த வழக்கு விசாரணையின்போது, 'குற்றம் சாட்டப்பட்டாலே வீடுகளை இடிப்பீர்களா?' என காவல்துறை மீது உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பா.ஜ., ஆளும் மாநிலங்களில் குறிப்பிட்ட சமூகத்தினர் மீது குற்றச்சாட்டு எழும் போது அவர்களுக்கு சொந்தமான வீடு, கட்டிடங்கள் ஆக்கிரமிப்பு பகுதியில் அமைந்திருப்பதாக புல்டோசர் மூலம் இடிக்கப்படும் சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளதாக எதிர்க்கட்சிகள், சிறுபான்மை அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதனை எதிர்த்து ஜாமியா உலேமா இந்த் உள்ளிட்ட அமைப்புகள் பல்வேறு மாநிலங்களில் இருந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்குகள் இன்று (செப்.,2) விசாரணைக்கு வந்தது. அப்போது, 'குற்றம் சாட்டப்பட்டாலே வீடுகளை இடிப்பீர்களா?' என காவல்துறையை கேள்விக்கேட்ட நீதிபதிகள், 'புல்டோசர்கள் வைத்து வீடுகளை இடிக்கும் விவகாரத்தில் நாடு முழுவதும் ஒரு சட்டம் வகுக்கப்படும்' எனத் தெரிவித்தனர். மேலும், புல்டோசர் நடவடிக்கை குறித்த வழக்கு விசாரணை மீண்டும் செப்.,17ம் தேதி நடைபெறும் எனக் கூறி ஒத்திவைத்தனர்.