புல்லட் ரயில் கட்டுமான பணியில் விபத்து; தொழிலாளி பலி
புல்லட் ரயில் கட்டுமான பணியில் விபத்து; தொழிலாளி பலி
ADDED : நவ 05, 2024 10:16 PM

ஆனந்த்: குஜராத்தில் புல்லட் ரயில் கட்டுமான பணியில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.
குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் வழித்தடத்தில் கட்டுமானப்பணிகள் நடந்து வந்த நிலையில், திடீரென கட்டிடத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி கவுரவ் ஜசானி கூறுகையில், வசாத் கிராமத்தில் இன்று மாலையில் இச்சம்பவம் நடந்தது.
காங்கிரீட் கட்டைகளுக்கு இடையில் சிக்கியிருந்த நான்கு தொழிலாளர்களில் இருவர் மீட்கப்பட்டுள்ளனர்.
அடித்தளப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் இரும்பு மற்றும் கான்கிரீட் தொகுதிகளின் தற்காலிக அமைப்பு கீழே விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது.
வதோதரா அருகே மாஹி ஆற்றின் அருகே இந்த புல்லட் ரயில் கட்டுமான தளம் உள்ளது. இடிபாடுகள் இடையே தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது.
இவ்வாறு ஜசானி கூறினார்.

