ADDED : நவ 09, 2024 11:05 PM
பாகலுார்: குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இரண்டு தனியார் பஸ் கிளீனர்கள் அடித்துக் கொல்லப்பட்டனர்.
பெங்களூரு, பாகலுார் போலீஸ் எல்லைக்குட்பட்ட சிங்கசந்திரா பகுதியில் தனியார் ஆம்னி பஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பஸ்களை நிறுத்துவதற்கான ஷெட் உள்ளது.
இங்கு நிறுத்தப்படும் பஸ்களை சுத்தம் செய்வதற்காக கிளீனர்கள் உள்ளனர். ராம்நகரின் நாகேஷ், 41, மாண்டியாவின் மஞ்சு, 44, ஆகிய இருவரும் கிளீனர்களாக வேலை செய்தனர். ஷெட் அருகே கூடாரம் அமைத்து தங்கியிருந்தனர்.
நேற்று காலை 7:00 மணி அளவில் சக கிளீனர்கள், ஷெட் பக்கம் சென்று பார்த்தபோது நாகேஷ், மஞ்சு ஆகிய இருவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர்.
தகவல் அறிந்த பாகலூர் போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று, இருவரின் உடல்களை பார்வையிட்டனர். இருவரையும் மர்ம நபர்கள் மரக்கட்டையால் தலையில் அடித்துக் கொலை செய்தது தெரிந்தது.
கொலை நடந்த இடத்தில் மது பாட்டில்களும் கிடந்தன. இதனால் குடிபோதையில் கொலை நடந்தது தெரிய வந்துள்ளது. கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.