மகளுக்கு 'இன்சுலின்' வாங்க பணமின்றி உ.பி.,யில் தொழிலதிபர் தற்கொலை
மகளுக்கு 'இன்சுலின்' வாங்க பணமின்றி உ.பி.,யில் தொழிலதிபர் தற்கொலை
UPDATED : ஜூலை 11, 2025 05:57 AM
ADDED : ஜூலை 11, 2025 12:27 AM

லக்னோ: உத்தர பிரதேசத்தில், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மகளுக்கு, 'இன்சுலின்' வாங்க பணமில்லாததால், துப்பாக்கியால் சுட்டு தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்டார்.
உ.பி.,யின் லக்னோவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்தார். நஷ்டம் காரணமாக கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
மேலும், இவரது மகளுக்கு நீரிழிவு பாதிப்பு உள்ளது. தொழில் நஷ்டத்தால், அவரது மகளுக்கு இன்சுலின் மருந்து வாங்க கூட பணம் இல்லாத நிலை ஏற்பட்டது.
இதனால் மனம் உடைந்த தொழிலதிபர் தன் அலுவலகத்தில் இருந்து, 'பேஸ்புக்' நேரலையில் தோன்றி தன் பிரச்னைகளை தெரிவித்தார். அதில், 'என் மகளுக்கு மருந்து வாங்கித் தரக்கூட முடியாத நிலையில் உள்ளேன். கடன் தொல்லை தாங்க முடியவில்லை.
'என் மறைவுக்கு பின், என் நலம் விரும்பிகள் என் குடும்பத்தினருக்கு உதவுவர் என நம்புகிறேன்' எனக்கூறி, அலுவலக காவலாளியின் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
'பேஸ்புக்' நேரலையை பார்த்து சம்பவ இடத்துக்கு குடும்பத்தினர் வருவதற்குள், தொழிலதிபர் இறந்து கிடந்தார்.