ADDED : டிச 07, 2024 11:42 PM

புதுடில்லி: டில்லி ஷாத்ரா மாவட்டத்தில் நடைபயிற்சி முடித்து வீட்டுக்கு திரும்பிய பாத்திரக்கடை உரிமையாளர் சுனில் ஜெயின், 57, என்பவரை, பைக்கில் வந்த இரண்டு நபர்கள் சுட்டுக் கொன்று விட்டு தப்பி ஓடினர்.
டில்லி கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாத்திரக்கடை உரிமையாளர் சுனில் ஜெயின்.
இவர் நேற்று காலை வழக்கம் போல் சூரஜ்மல் விஹாரில் உள்ள யமுனா விளையாட்டு வளாகத்தில் நடைபயிற்சி முடித்துவிட்டு, நண்பர்களுடன் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
பார்ஸ் பஜார் பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது, பைக்கில் முகமூடி அணிந்து வந்த இரு மர்ம நபர்கள், சுனில் ஜெயினிடம் மொபைல் போன் கீழே விழுந்துவிட்டதாகக் கூறினர்.
அவர் வண்டியை நிறுத்தி பார்த்த போது, அவரது பெயரை விசாரித்த நபர்கள், பெயரை உறுதி செய்து, அவரை நோக்கி கை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடினர்.
ஏழு குண்டுகள் பாய்ந்த நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் அங்கு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து, குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல் கோவிந்த்புரியில் நடந்த மற்றொரு சம்பவத்தில், பொது கழிப்பறையை சுத்தமாக வைத்திருப்பது தொடர்பாக அண்டை வீட்டினர் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில், பிகாம் சிங் என்பவர் கத்தியால் குத்தியதில் ஒருவர் உயிரிழந்தார்; இரண்டு இளைஞர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.