இடைத்தேர்தல் பிரசாரம் இன்று நிறைவு 3 தொகுதிகளில் நாளை மறுதினம் ஓட்டுப்பதிவு
இடைத்தேர்தல் பிரசாரம் இன்று நிறைவு 3 தொகுதிகளில் நாளை மறுதினம் ஓட்டுப்பதிவு
ADDED : நவ 11, 2024 05:24 AM

பெங்களூரு: கர்நாடகாவில் வரும் 13ம் தேதி நடக்க உள்ள மூன்று சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.
கர்நாடகாவில் ராம்நகரின் சென்னப்பட்டணா, ஹாவேரியின் ஷிகாவி, பல்லாரியின் சண்டூர் --- தனி ஆகிய சட்டசபை தொகுதிகளில் முறையே வெற்றி பெற்ற குமாரசாமி, பசவராஜ் பொம்மை, துக்காராம் ஆகியோர், லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.,யாகினர்.
வேட்பாளர்
காலியான இத்தொகுதிகளுக்கு, வரும் 13ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. தேர்தல் தேதி அறிவித்த சில நாட்களில், ஷிகாவிக்கு பரத் பொம்மை, சண்டூருக்கு பங்காரு ஹனுமந்தா ஆகியோரின் பெயரை பா.ஜ., அறிவித்தது.
சென்னப்பட்டணா தொகுதிக்கு மட்டும் நீண்ட இழுபறிக்கு பின், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.ஜ.த., மாநில இளைஞர் அணி தலைவரும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனுமான நிகில் பெயர் அறிவிக்கப்பட்டது.
அதுபோன்று, சண்டூருக்கு காங்கிரஸ் எம்.பி., துக்காராமின் மனைவி அன்னபூர்ணாவின் பெயரும், அதன்பின், ஷிகாவிக்கு யாசிர் கான் பதான் பெயரை காங்கிரஸ் அறிவித்தது.
சென்னப்பட்டணாவில் சீட் எதிர்பார்த்த யோகேஸ்வருக்கு பா.ஜ., சீட் வழங்காததால், அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். அக்கட்சியில் இணைந்த நாளன்றே, சென்னப்பட்டணா காங்., வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
வேட்பு மனு தாக்கல் செய்த பின், கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். வேட்பாளர்கள் வெற்றி, மூன்று கட்சிகளும் நட்சத்திர பிரசாரகர்களை அறிவித்தது.
யோகேஸ்வர் காங்கிரசில் இணைய, ஜி.டி.தேவகவுடா தான் காரணம் என்பதால், தங்களின் நட்சத்திர பிரசாரகர்கள் பட்டியலில், அவரை ம.ஜ.த., சேர்க்கவில்லை.
பறிமுதல்
மூன்று தொகுதிகளிலும் ஹைவோல்டேஜ் தொகுதியான சென்னப்பட்டணாவில், கடந்த சில நாட்களுக்கு முன், குடோன் ஒன்றில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த வேஷ்டி சட்டை, சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதுபோன்று, கணக்கில் தெரியாத 27 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில், சமூக வலைதளத்தில், ஒரு வீடியோ வெளியானது. அதில், சென்னப்பட்டணாவில், சிறுபான்மையினரின் ஓட்டுகளை கவருவதற்காக, நிகில் பிரசார நோட்டீசுடன், சிறிய குர்ஆன் புத்தகத்தில், 1,000 ரூபாய் வைத்து வினியோகம் செய்யப்பட்டு உள்ளது.
இத்தொகுதியை சேர்ந்த சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த நபர், 'ம.ஜ.த.,வை சேர்ந்த நான்கு பேர், அவர்கள் கட்சி வேட்பாளருக்கு ஓட்டுபோடும்படி கூறி, குர்ஆனுடன், பணத்தை வழங்கினர். எங்கள் மதத்தை நாங்கள் ஏன் விற்க வேண்டும். ஓட்டு கேட்கும் நீங்கள், என்ன செய்தீர்கள்' என்று கேள்வி எழுப்புகிறார்.
ஆனால், ம.ஜ.த., வினரோ, காங்கிரஸ் தான் குர்ஆனுடன் இந்த பணத்தை வினியோகித்தனர் என்று குற்றம்சாட்டி உள்ளனர்.
இம்மூன்று தொகுதிகளிலும், பா.ஜ., - ம.ஜ.த.,வினரும், சித்தராமையாவை கீழே இறக்க வேண்டும் என்பதற்காக, எப்போதும் இல்லாத அளவுக்கு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னப்பட்டணாவில் தனது பேரனை வெற்றி பெற வைக்க, தள்ளாத வயதிலும் முன்னாள் பிரதமர் தேவகவுடா பிரசாரம் செய்து வருகிறார்.
கடந்த 20 நாட்களும் பரபரப்பாக காணப்பட்ட மூன்று தொகுதிகளில், வரும் 13ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்கான பிரசாரம், இன்று மாலை 5:00 மணிக்கு நிறைவு பெறுகிறது.
இதை தொடர்ந்து கட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்வர். இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை, வரும் 23ம் தேதி நடக்கிறது.
ராம்நகரின் சென்னப்பட்டணாவில், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வேட்பாளர் சென்னப்பட்டணா, காங்கிரசின் யோகேஸ்வர் உட்பட 31 பேரும்; ஹாவேரியின் ஷிகாவியில் பா.ஜ., பரத் பொம்மை, காங்கிரசின் சையது யாசிர் பதான் உட்பட எட்டு பேரும்; பல்லாரியின் சண்டூரில் பா.ஜ., பங்காரு ஹனுமந்தா, காங்கிரசின் அன்னபூர்ணா உட்பட ஆறு பேர் போட்டியிடுகின்றனர்.