ADDED : பிப் 08, 2025 09:15 PM

சாம்ராஜநகர்: மலை மஹாதேஸ்வரா மலையில், வரும் 17ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடத்த, மாநில அரசு முடிவு செய்துள்ளது.
சாம்ராஜ்நகர் மாவட்டம், பின் தங்கிய மாவட்டமாகும். தமிழகம் மற்றும் கேரள எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. மாவட்டத்தில் 48 சதவீதம் வனப்பகுதி சூழ்ந்துள்ளது.
இங்குள்ள புலிகள் சரணாலயம், பண்டிப்பூர் மிகவும் பிரபலமானது. சுற்றுலா பயணியரை தன் வசம் ஈர்க்கிறது. இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கின்றன.
சாம்ராஜ்நகர், ஹனுாரில் உள்ள மலை மஹாதேஸ்வரா மலை உட்பட, பல தீர்த்த தலங்களும் உள்ளன. அபாரமான இயற்கை வளங்கள் இருந்தாலும், மாவட்டத்தில் கால் வைத்தால், முதல்வர்கள் பதவியை இழப்பர் என்ற மூடநம்பிக்கை இருந்தது.
இதற்கு முன்பு எடியூரப்பா, குமாரசாமி, சதானந்த கவுடா, ஜெகதீஷ் ஷெட்டர் உட்பட, பலரும் முதல்வர் பதவியில் இருக்கும்போது, சாம்ராஜ்நகரில் கால் வைத்ததே இல்லை. ஆனால் முதல்வர் சித்தராமையா, மாவட்டம் மீதான களங்கத்தை போக்கியுள்ளார்.
அவர் 2013ல் முதன் முறையாக, முதல்வரானபோது பல முறை சாம்ராஜ்நகருக்கு சென்றார். ஐந்தாண்டுகள் முதல்வர் பதவியை நிறைவு செய்தார். இதனால் மாவட்டம் மீதான களங்கம் நீங்கியது. இரண்டாவது முறை முதல்வரான பின்னும், இதுவரை 20க்கும் மேற்பட்ட முறை, சாம்ராஜ்நகருக்கு சென்று வந்துள்ளார்.
மலை மஹாதேஸ்வரா மலையில், அமைச்சரவை கூட்டம் நடத்த முதல்வர் சித்தராமையா முடிவு செய்துள்ளார். இம்மாதம் 17ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடத்தப்படவுள்ளது. மாவட்ட மேம்பாடு குறித்து ஆலோசிக்க உள்ளார்.