பெண் ஊழியரை மிரட்டி பலாத்காரம் கால் சென்டர் மேலாளர் கைது
பெண் ஊழியரை மிரட்டி பலாத்காரம் கால் சென்டர் மேலாளர் கைது
ADDED : ஜன 07, 2024 02:32 AM

பசவேஸ்வராநகர் : விருந்துக்கு அழைத்துச் சென்று, பெண் ஊழியரை மிரட்டி பலாத்காரம் செய்த கால் சென்டர் மேலாளர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூரு கே.ஆர்., புரத்தைச் சேர்ந்தவர் சையது அக்ரம், 40. பசவேஸ்வராநகரில் உள்ள கால் சென்டர் நிறுவனத்தில், மேலாளராக பணியாற்றினார்.
இந்த நிறுவனத்தில் திருமணமான 32 வயது, பெண் ஊழியர் வேலை செய்கிறார்.
கடந்த 1ம் தேதி மதியம், புத்தாண்டு விருந்து அளிப்பதாக கூறி, பெண் ஊழியரை, சையது அக்ரம், பைக்கில் அழைத்துச் சென்றார்.
ஹோட்டலுக்கு செல்லாமல், வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு வைத்து பெண் ஊழியரை மிரட்டி, பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து வெளியே கூறினால் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார். பயந்து போன பெண் ஊழியர், யாரிடமும் சொல்லாமல் இருந்து உள்ளார்.
அதன்பின்னர் தைரியத்தை வரவழைத்து, கணவரிடம் கூறி கதறி அழுதார்.
இதையடுத்து பெண்ணின் கணவர் சம்பவம் குறித்து, பசவேஸ்வராநகர் போலீசில் கடந்த 4ம் தேதி, புகார் அளித்தார். நேற்று முன்தினம் சையது அக்ரம் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடக்கிறது.