ADDED : செப் 25, 2024 03:01 AM

“இந்த நாட்டின் ஆன்மாவாக விளங்குவோர், விவசாயிகள். இனி வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் விவசாயிகளை சந்தித்து, அவர்களின் குறைகள் கேட்கப்படும்,” என, மத்திய விவசாய அமைச்சர் சிவ்ராஜ்சிங் சவுகான் கூறினார்.
மத்திய விவசாயத் துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவருமான சிவ்ராஜ் சிங் சவுகான் சமீபத்தில் வெளியிட்டிருந்த செய்தியில், 'ஒவ்வொரு வாரமும் செவ்வாய் அன்று விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகளைச் சேர்ந்தவர்களை நேரில் சந்தித்து, ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
'இந்த சந்திப்பின்போது விவசாயிகளின் குறைகளை கேட்பதோடு, அவற்றுக்கான தீர்வுகளும் கண்டறியப்படும்' என்று தெரிவித்திருந்தார்.
இதன்படி, டில்லியில் உள்ள விவசாய ஆராய்ச்சி மைய வளாகத்தில் விவசாயிகளுடனான சந்திப்புக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில், பல அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். அவர்களுடன் அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஆலோசனை நடத்தினார். அப்போது, எந்த பிரச்னையாக இருந்தாலும் வெளிப்படையாக தெரிவிக்கும்படியும், உரையாடல்கள் வாயிலாகவே அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வை எட்ட முடியும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
இதன்பின், செய்தியாளர்களுக்கு அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் அளித்த பேட்டி:
இந்தியாவின் முதுகெலும்பு போன்றது விவசாயம். இந்த நாட்டின் ஆன்மா, விவசாயிகள். விவசாயிகளுக்கு சேவை செய்வது கடவுளை வணங்குவதற்கு சமம். ஏராளமான விவசாயிகளை சந்தித்துப் பேசினேன். அவர்கள், ஏராளமான பரிந்துரைகளை தந்தனர். நான் பேசுவதைக் காட்டிலும், அவர்கள் கூறும் கருத்துகளை கவனத்துடன் கேட்டேன்.
இனி, திட்டமிட்டபடி வாரந்தோறும் செவ்வாய் கிழமை விவசாயிகளை சந்தித்து அவர்களின் குறைகள் கேட்கப்படும். விவசாய அமைச்சகம் உங்களுக்கானது. இவ்வாறு அடிக்கடி சந்தித்து பேசி ஆலோசனைகளை பரிமாறுவதன் வாயிலாக, எத்தகைய கடினமான பிரச்னைகளுக்கும் தீர்வுகளை காண முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது டில்லி நிருபர் -