9,842 அடி உயர சிகரத்தில் ஏறி போதைக்கு எதிராக பிரசாரம்
9,842 அடி உயர சிகரத்தில் ஏறி போதைக்கு எதிராக பிரசாரம்
ADDED : மே 06, 2025 01:17 AM

இம்பால் : தெலுங்கானாவைச் சேர்ந்த இளைஞர், மணிப்பூரின் மிக உயரமான சிகரமான மவுண்ட் இசோவில் ஏறி, போதைப் பழக்கத்துக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
தெலுங்கானாவைச் சேர்ந்த யஷ்வந்த் என்ற இளைஞர் மலையேறுவதில் ஆர்வம் உடையவர். 16 வயதில் மலையேற்றப் பயிற்சியை துவங்கிய யஷ்வந்த், நாட்டில் உள்ள உயரமான சிகரங்களில் ஏறுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
மேலும் இதன் வாயிலாக, போதைப் பழக்கம், பந்தய செயலிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியிலும் இறங்கியுள்ளார்.
இதன்படி, மணிப்பூரின் சேனாபதி மாவட்டத்தில் உள்ள மவுண்ட் டெம்பு என்று அழைக்கப்படும், 9,842 அடி உயரமுள்ள மவுண்ட் இசோ சிகரத்தில் ஏறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதுகுறித்து யஷ்வந்த் சிங் கூறுகையில், ''நாடு முழுதும் ஆயிரக்கணக்கான மக்கள் பந்தய செயலிகளுக்கு அடிமையாகி உள்ளனர். உழைத்து சம்பாதித்த பணத்தை இழக்கின்றனர். போதைப் பழக்கத்தால் ஏராளமான இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
''எனவே, இந்த தீமைகளுக்கு எதிராக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புகிறேன். இதன் ஒரு பகுதியாகவே, இந்த சிகரத்தில் ஏறியுள்ளேன்,'' என்றார்.