இலகு ரக வாகன உரிமம் உள்ளவர்கள் சரக்கு வாகனங்களை ஓட்டலாமா...: சுப்ரீம் கோர்ட் முக்கிய தீர்ப்பு
இலகு ரக வாகன உரிமம் உள்ளவர்கள் சரக்கு வாகனங்களை ஓட்டலாமா...: சுப்ரீம் கோர்ட் முக்கிய தீர்ப்பு
UPDATED : நவ 06, 2024 05:34 PM
ADDED : நவ 06, 2024 05:32 PM

புதுடில்லி: இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள், 7,500 கிலோ எடையுள்ள வாகனத்தை ஓட்டுவதற்கு உரிமை உண்டு என சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்தது.
இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள், சரக்கு வாகனங்களை ஓட்டி விபத்து ஏற்படும் பட்சத்தில் அவர்களுக்கு காப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனங்கள் மறுத்துவந்தன. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அதில், குறிப்பிட்ட விபத்தில் வாகனம் ஓட்டிய நபர் இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்து இருந்தார். ஆனால், அவர் ஓட்டிச் சென்ற வாகனம் போக்குவரத்து வாகனம் என்பதால், அதற்கான காப்பீட்டு பணத்தை வழங்க காப்பீட்டு நிறுவனங்கள் மறுப்பதாக கூறப்பட்டு இருந்தது.
இதனை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பில் கூறியதாவது: இலகு ரக வாகனத்திற்கும், போக்குவரத்து வாகனத்திற்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை. இதற்காக தனித்தனி ஓட்டுநர் உரிமம் வைத்து இருந்தாலும், இலகு ரக உரிமம் வைத்துள்ளவர்கள் 7,500 கிலோ வரை எடைகொண்ட வாகனத்தை ஓட்டுவதற்கு அனுமதி உள்ளது.
சில வாகன விபத்துகளில் போக்குவரத்து வாகனத்தை இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்கள் இயக்கி விபத்தில் சிக்கும்போது இதை காரணம் காட்டி காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீட்டு பணத்தை வழங்க மறுப்பது சட்ட விரோதம் ஆகும் என தீர்ப்பு கூறப்பட்டு உள்ளது.