'ஜாபர் சேட் மீதான முறைகேடு வழக்கை ஐகோர்ட் மீண்டும் விசாரிக்க முடியுமா?' அனைத்து தரப்பு வாதங்களை கேட்க முடிவு
'ஜாபர் சேட் மீதான முறைகேடு வழக்கை ஐகோர்ட் மீண்டும் விசாரிக்க முடியுமா?' அனைத்து தரப்பு வாதங்களை கேட்க முடிவு
ADDED : டிச 19, 2024 02:13 AM
புதுடில்லி, கடந்த 2006 - -2011ம் ஆண்டில், சென்னை திருவான்மியூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீட்டுமனையை முறைகேடாக பெற்றதாக ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஜாபர் சேட், அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிந்து விசாரணை நடத்தியது.
இந்த வழக்கின் அடிப்படையில், சட்ட விரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் ஜாபர் சேட் மீது அமலாக்கத்துறை, 2020ல் வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஜாபர் சேட் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.சிவஞானம் அமர்வு தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது.
பின்னர் சில விளக்கங்களை பெறுவதற்காக வழக்கு மீண்டும் பட்டியலிடப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். அமலாக்கத்துறை வாதம் முடிந்த பின் அன்றைய தினமே உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், ஜாபர் சேட் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் நிச்சயம் தீர்ப்பு வழங்க வேண்டும் என திட்டவட்டமாக கூறியிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி அபய் எஸ் ஓகா தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாபர் சேட் சார்பில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுாத்ரா மற்றும் வழக்கறிஞர் ராம் சங்கர் ஆகியோர் ஆஜராகினர்.
'விசாரணை முடிந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வழக்கை மீண்டும் உயர்நீதிமன்றம் விசாரிப்பது என்பது சட்டத்திற்கு எதிரானது. இதை பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பாக வழங்கி உள்ளது' என, வாதிட்டனர்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர், 'தீர்ப்பு எழுதி அதில் சம்பந்தப்பட்ட நீதிபதிகள் கையொப்பமிடாத வரை, அந்த வழக்கை நீதிபதிகள் எப்போது வேண்டுமானாலும் விசாரிக்கலாம்' எனக் கூறி, அது தொடர்பான சில தீர்ப்புகளை சுட்டிக்காட்டினார்
இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது:
ஜாபர் சேட் வழக்கு விவகாரத்தை பொறுத்தவரை உயர் நீதிமன்றம் அதன் தீர்ப்பை நிச்சயம் வழங்க வேண்டும்.
ஆனால் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்ட ஒரு வழக்கை மீண்டும் விசாரணைக்கு நீதிமன்றங்கள் எடுத்துக் கொள்ள முடியுமா என்ற கேள்வி இந்த வழக்கில் எழுகிறது.
அவ்வாறு எடுத்துக் கொள்ளப்படும் பட்சத்தில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டுமா என்பதும் சட்ட கேள்வியாக எழுகிறது. எனவே இது தொடர்பாக இரு தரப்பினரும் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அனுமதிக்கிறோம்.
இவ்வாறு கூறிய நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஜனவரி 8ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.