ஓட்டு இயந்திரம் மோசடி என நிரூபிக்க முடியுமா? காங்., தலைவர்களுக்கு திரிணமுல் காங்., கேள்வி
ஓட்டு இயந்திரம் மோசடி என நிரூபிக்க முடியுமா? காங்., தலைவர்களுக்கு திரிணமுல் காங்., கேள்வி
ADDED : டிச 17, 2024 04:47 AM

புதுடில்லி: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்படுவதாக கூறும் காங்கிரஸ், அதை நிரூபிக்க வேண்டும் என, கூட்டணி கட்சியான திரிணமுல் காங்கிரஸ் கூறியுள்ளது.
சமீபத்தில் நடந்த ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல்களில், பா.ஜ., தலைமையிலான கூட்டணி பெரும் வெற்றியை பெற்றது. இதைத் தொடர்ந்து, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்பட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றஞ்சாட்டின.
ஜம்மு - காஷ்மீர், ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கூட்டணி வென்றபோது, இது போன்று ஏன் குற்றஞ்சாட்டவில்லை என்று பா.ஜ., கேள்வி எழுப்பியிருந்தது.
உறுதி
இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு, 'இண்டி' கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய மாநாட்டு கட்சி எதிர்ப்பு தெரிவித்துஉள்ளது. ஜம்மு - காஷ்மீர் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சித் தலைவருமான ஒமர் அப்துல்லா, காங்கிரஸ் புகார்கள் குறித்து கேள்வி எழுப்பினார்.
'லோக்சபா தேர்தலில் உங்களுடைய கட்சிக்கு 100 எம்.பி.,க்கள் கிடைத்தபோது, அது பெரிய வெற்றி என்று கூறினீர்கள். அதே நேரத்தில், சில தேர்தல்களில் தோல்வியடைந்தால், உடனே மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை குற்றம் சொல்கிறீர்கள். உங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும்.
'மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை ஏற்காவிட்டால், தேர்தல்களில் போட்டியிடாதீர்கள்' என, ஒமர் அப்துல்லா நேற்று முன்தினம் கூறினார்.
இந்நிலையில், இண்டி கூட்டணியில் இடம்பெற்றுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரசும், இதே பாணியில் காங்கிரசின் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.
அக்கட்சியின் பொதுச்செயலரும், மம்தாவின் உறவினரும், லோக்சபா எம்.பி.,யுமான அபிஷேக் பானர்ஜி நேற்று கூறியுள்ளதாவது:
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும் என்று சந்தேகத்தை எழுப்புகின்றனர்.
அவ்வாறு மோசடி செய்ய முடியும் என்றால், நேரடியாக தேர்தல் கமிஷனுக்கு சென்று, எப்படி மோசடி செய்ய முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும். அதை விட்டு, வெறும் அறிக்கைகளை மட்டும் வெளியிடுவது சரியல்ல.
பல கட்டங்களில் நடத்தப்படும் சோதனைகளில் கட்சிகள் பங்கேற்கும்போது, இது போன்ற குற்றச்சாட்டுகள் எடுபடாது; தேவையில்லாதது.
இவ்வாறு அவர் கூறினார்.
கோபம்
இது குறித்து, மத்திய அமைச்சர் சதீஷ் சந்திர துபே கூறியுள்ளதாவது:
ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ள இண்டி கூட்டணி வென்றது.
அப்போதெல்லாம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பவில்லை. ஆனால், ஹரியானா, மஹாராஷ்டிராவில் தோல்வி அடைந்ததும் கேள்வி எழுப்புகின்றனர்.
பொய்களால் மட்டுமே ஒரு கூட்டணி நிலைத்திருக்க முடியாது. அபிஷேக் பானர்ஜி தாமதமாக இருந்தாலும், உண்மையை புரிந்து கொண்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இண்டி கூட்டணிக்கு தலைமை ஏற்க தயாராக இருப்பதாக மம்தா பானர்ஜி ஏற்கனவே அறிவித்ததால் அதிருப்தியில் உள்ள காங்கிரசை, அபிஷேக் பானர்ஜியின் இந்த சீண்டல், மேலும் கோபப்படுத்தி உள்ளது.