'நிஜ்ஜார் கொலை வழக்கில் கனடா எந்த தகவலும் பகிரவில்லை' : ஜெய்சங்கர் குற்றச்சாட்டு
'நிஜ்ஜார் கொலை வழக்கில் கனடா எந்த தகவலும் பகிரவில்லை' : ஜெய்சங்கர் குற்றச்சாட்டு
ADDED : மே 13, 2024 08:56 PM

மும்பை :“காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பாக எந்த தகவல்களையும் கனடா அரசு, இந்தியாவுடன் பகிரவில்லை,” என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அந்த நாட்டின் பார்லிமென்டில் குற்றஞ்சாட்டினார்.இந்த விவகாரத்தால், கனடா - இந்தியா இடையேயான துாதரக உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த கொலை வழக்கில், கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் நான்கு பேரை, அந்த நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியது, நிஜ்ஜார் கொலை வழக்கு விசாரணையில் எந்த தகவலையும் கனடா அரசும், இந்த வழக்கை விசாரிக்கும் கனடா புலனாய்வு அமைப்பும், இதுவரை நேரடியான எந்த தகவலையும் இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளவில்லை. காலிஸ்தான் ஆதரவாளர்களை அமெரிக்கா மற்றும் கனடா நாடுகள் ஊக்குவிப்பது கவலை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.