UPDATED : ஜூன் 07, 2025 10:55 AM
ADDED : ஜூன் 06, 2025 07:36 PM

புதுடில்லி: கனடாவில் நடக்கும் ஜி7 மாநாட்டில் பங்கேற்கும்படி பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பு விடுத்தார்.
ஜி - 7 எனப்படும் பெரும் பொருளாதார வளர்ந்த நாடுகள் அமைப்பில், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், கனடா ஆகிய ஏழு நாடுகள் இடம்பெற்றுள்ளன.வட அமெரிக்க நாடான கனடாவில், ஜி - 7 மாநாடு, வரும் 15 - 17ல் நடக்கிறது. கடந்த இரு ஆண்டுகளில் ஜப்பான் மற்றும் இத்தாலியில் நடந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த மாநாடுகளில் பிரதமர் மோடி பங்கேற்றார். ஆனால், இந்த முறை, கனடாவில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
இந்நிலையில், பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட கனடா பிரதமர் மார்க் கார்னி, இந்த மாநாட்டில் பங்கேற்கும்படி அழைப்பு விடுத்தார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது; கனடா பிரதமர் மார்க் கார்னியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சமீபத்தில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றதற்கு அவருக்கு பாராட்டு தெரிவித்தேன். கனனாஸ்கிஸ் நகரில் நடக்கும் ஜி7 மாநாட்டில் பங்கேற்க எனக்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி தெரிவித்தேன். மக்கள் இடையேயான ஆழமான உறவு மூலம் பிணைக்கப்பட்ட துடிப்பான ஜனநாயக நாடுகளான இந்தியாவும், கனடாவும், பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட நலன்களுக்காக செயல்படும். மாநாட்டில் நமது சந்திப்புக்காக ஆர்வமாக இருக்கிறேன். இவ்வாறு அந்த பதிவில் மோடி கூறியுள்ளார்.
ஜஸ்டின் ட்ரூடோ கனடா பிரதமர் ஆக இருந்த போது காலிஸ்தான் பயங்கரவாதிகள் விவகாரத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. புதிய பிரதமராக மார்க் கார்னி, பதவியேற்ற பிறகு இரு நாடுகளுக்கு இடையிலான உறவு சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்சூழ்நிலையில் ஜி7 மாநாட்டில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு மார்க் கார்னி அழைப்பு விடுத்துள்ளார்.