ADDED : ஆக 29, 2025 12:47 AM

புதுடில்லி: இந்தியா - கனடா இடையிலான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து, ஒன்பது மாதங்களுக்கு பின், அந்நாட்டிற்கான இந்திய துாதராக தினேஷ் கே.பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார்.
வட அமெரிக்க நாடான கனடாவில் வசித்து வந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், 2023ல் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார்.
இந்த கொலையில், நம் நாட்டிற்கு தொடர்பு இருப்பதாக, அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினார். இந்த குற்றச்சாட்டை நம் வெளியுறவு அமைச்சகம் பலமுறை மறுத்தது.
நிஜ்ஜார் கொலை வழக்கில், கனடா நாட்டிற்கான இந்திய துாதராக இருந்த சஞ்சய் குமார் வர்மாவை அந்நாட்டு அரசு தொடர்புபடுத்தியது.
இதற்கு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு, கடந்த ஆண்டு அக்டோபரில், சஞ்சய் குமார் உள்ளிட்ட அதிகாரிகளை இந்தியா திரும்புமாறு அறிவுறுத்தியது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் இந்தியா வந்தனர். இது, இந்தியா - கனடா இடையிலான உறவில் விரிசலை அதிகரித்தது.
கடந்த ஜூனில், கனடாவின் கனனாஸ்கிசில் நடந்த, 'ஜி - 7' உச்சி மாநாட்டின் போது, பிரதமர் நரேந்திர மோடியும், அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னியும் சந்தித்து பேசினர். அப்போது, இரு தரப்பு உறவுகளை மீட்டெடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
இருநாட்டு துாதரகங்களிலும், துாதர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், ஒன்பது மாதங்களுக்கு பின், கனடாவுக்கான இந்திய துாதர் நேற்று நியமிக்கப்பட்டார்.
நம் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், ஐ.எப்.எஸ்., எனப்படும் இந்திய வெளியுறவு சேவை அதிகாரி தினேஷ் கே.பட்நாயக் கனடாவுக்கான துாதராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஐரோப்பிய நாடான ஸ்பெயினுக்கான துாதராக பணியாற்றி வரும் தினேஷ், உலக நாடுகளுடனான உறவை மேம்படுத்துவதில், 25 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்.
சீனாவின் பீஜிங், வங்கதேசத்தின் டாக்கா, ஆஸ்திரியா தலைநகர் வியன்னா மற்றும் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள துாதரகங்களில் தினேஷ் பணியாற்றியுள்ளார். மொராக்கோ, கம்போடியா நாடுகளுக்கான இந்திய துாதராகவும் இவர் இருந்துள்ளார்.
இந்திய கலாசார உறவுகளுக்கான கவுன்சிலின் இயக்குநர் ஜெனரலாகவும் தினேஷ் பதவி வகித்துள்ளார். புதிய துாதர் நியமனம், இந்தியா - கனடா இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் என, நம் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.