பி.சி.சி.ஐ., முன்னாள் தலைவர் கங்குலி சென்ற கார் விபத்து
பி.சி.சி.ஐ., முன்னாள் தலைவர் கங்குலி சென்ற கார் விபத்து
ADDED : பிப் 21, 2025 09:54 AM

பர்த்வான்: மேற்குவங்கத்தில் பி.சி.சி.ஐ., முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி சென்ற கார் விபத்தில் சிக்கியது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பி.சி.சி.ஐ., முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி, நேற்று பர்த்வானில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தார்.
துர்காபூர் எக்ஸ்பிரஸ் சாலையில் தன்டன்பூர் அருகே சென்ற போது, அவரது காரை லாரி ஒன்று ஓவர்டேக் செய்துள்ளது. அப்போது, அவரது கார் டிரைவர் சட்டென்று பிரேக் போட்டுள்ளார். இதனால், அவரது காருக்கு பின்புறம் வந்து கொண்டிருந்த வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில், கங்குலி சென்ற காரும் பாதிக்கப்பட்டது. கார் சிறிய சேதம் அடைந்த நிலையில், கங்குலிக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இதனால், கங்குலி மீண்டும் திட்டமிட்டபடி, பர்த்வானுக்கு புறப்பட்டு சென்றார்.