'கேக்'கில் புற்றுநோய் ரசாயனங்கள்: உணவு துறை ஆய்வில் அதிர்ச்சி
'கேக்'கில் புற்றுநோய் ரசாயனங்கள்: உணவு துறை ஆய்வில் அதிர்ச்சி
ADDED : செப் 30, 2024 12:22 AM

பெங்களூரு : கேக் பிரியர்களுக்கு அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. ரெட் வெல்வெட், பிளாக் பாரெஸ்ட் கேக்களில் புற்று நோய்க்கு காரணமாகும் பொருட்கள் சேர்க்கப்படுவதை, உணவுத்துறை நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.
சில தின்பண்டங்களில், அபாயமான செயற்கை நிறங்கள் சேர்க்கப்படுகின்றன. இவைகள் உடல் ஆரோக்கியத்தை பாதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. கோபி மஞ்சூரியன், சிக்கன், பிஷ், மட்டன் கபாப்களில் செயற்கை நிறம் சேர்க்க, உணவுத்துறை தடை விதித்திருந்தது. சிறார்கள் விரும்பி சாப்பிடும் பஞ்சு மிட்டாயிலும் செயற்கை நிறங்களை சேர்க்க கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
பெரியவர்கள், சிறார்கள் விரும்பி சாப்பிடும் கேக்குகளிலும் இத்தகைய நிறங்கள் சேர்க்கப்படுவதாக கூறப்பட்டது. எனவே உணவுத்துறை 12 விதமான கேக் மாதிரிகளை சேகரித்து, ஆய்வகத்துக்கு அனுப்பியது. இவற்றில் சேர்க்கப்படும் பொருட்கள் புற்று நோய்க்கு காரணமாகும்; இத்தகைய கேக்குகள் சாப்பிட தகுந்தது அல்ல என்பது ஆய்வில் தெரிய வந்தது.
குறிப்பாக பிளாக் பாரெஸ்ட், ரெட் வெல்வெட் கேக்குகளில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் செயற்கை நிறங்களால், அலர்ஜி, ஆஸ்துமா, புற்றுநோய், அஜீரண கோளாறு, தலைவலி, சரும பிரச்னை, சுவாச கோளாறு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம் என, ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதை தீவிரமாக கருதிய உணவுத்துறை, கேக் தயாரிப்போர், உணவு பாதுகாப்பு, தரக்கட்டுப்பாட்டு துறை உத்தரவை பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் நடவடிக்கை எடுப்பதாக எச்சரித்துள்ளது.
சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறியதாவது: மாதந்தோறும் உணவுப் பொருட்களின் தரத்தை பரிசோதிக்கிறோம். அறிக்கையை வெளியிடுகிறோம். அதே போன்று கேக் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இவற்றில் செயற்கை நிறம் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோன்று உடலுக்கு ஆபத்து ஏற்படுத்தும் நிறங்களை கேக் தயாரிப்போர், பயன்படுத்த கூடாது.
உணவின் தரத்தை மேம்படுத்த வேண்டும். இது குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது, எங்களின் நோக்கமாகும். இவ்வாறு அவர் கூறினார்.