ஜாதிவாரி அறிக்கையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு
ஜாதிவாரி அறிக்கையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு
ADDED : மார் 01, 2024 06:30 AM
பெங்களூரு: 'மாநில அரசிடம் தாக்கல் செய்யப்பட்ட, ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை பகிரங்கப்படுத்த கூடாது' என, அரசுக்கு உத்தரவிட கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சித்தராமையா முதன் முறையாக, 2013 - 18ல் முதல்வர் பதவி வகித்தபோது, பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் ஆணையம் சார்பில், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார். இந்த ஆணையத்தின் அறிக்கை, நேற்று முதல்வர் சித்தராமையாவிடம் தாக்கல் செய்யப்பட்டது.
'இந்த அறிக்கையை பகிரங்கப்படுத்த கூடாது' என, அரசுக்கு உத்தரவிட கோரி, ஹாசன், ஹொளேநரசிபுராவை சேர்ந்த வக்கீல் ரகு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மனுவில், 'ஜாதி வாரியான ஆய்வு நடத்த, பிற்படுத்தப்பட்ட ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை. ஆணையத்தின் இன்னாள் தலைவர் ஜெயபிரகாஷ் ஹெக்டேவின் பதவிக்காலம், நேற்று முடிவடைந்தது. அவசர, அவசரமாக அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்துள்ளார். முந்தைய தலைவர் தயாரித்த அறிக்கையை, இன்னாள் தலைவர் தாக்கல் செய்துள்ளார். இதை பகிரங்கப்படுத்த அனுமதிக்க கூடாது.
'கல்வி, பொருளாதாரம், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த, மத்திய அரசுக்கு மட்டுமே, அதிகாரம் உள்ளது. அறிக்கையை சட்டவிரோதமானது என, அறிவிக்க வேண்டும்' என கோரியுள்ளார்.
மனு, இன்று விசாரணைக்கு வருகிறது.

