பத்திரிகையாளர்களை தாக்கிய நடிகர் மோகன் பாபு மீது வழக்கு
பத்திரிகையாளர்களை தாக்கிய நடிகர் மோகன் பாபு மீது வழக்கு
ADDED : டிச 12, 2024 01:40 AM

ஹைதராபாத், சொத்து தகராறு தொடர்பான செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களை தாக்கிய பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
தெலுங்கானாவின் ஹைதராபாதில் உள்ள ஜலப்பள்ளி என்ற இடத்தில், பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு, 72, வசித்து வருகிறார். இவருக்கும், இவரது இளைய மகனும், நடிகருமான மஞ்சு மனோஜுக்கும் இடையே சொத்து தகராறு உள்ளது.
இது தொடர்பாக, இரு தரப்பினரும் போலீசில் புகார் அளித்தனர். நடிகர் மோகன் பாபுவின் அழைப்பின்படி, சொத்து தகராறு குறித்த செய்தியை சேகரிக்க, ஜலப்பள்ளியில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று முன்தியனம் இரவு பத்திரிகையாளர்கள் சென்றனர்.
அப்போது, அவரது மகன் மஞ்சு மனோஜும் அங்கு வந்தார். நடிகர் மோகன் பாபுவின் பாதுகாவலர்கள் அவரை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. அவர்களிடம் கடும் வாக்குவாதம் செய்த மஞ்சு மனோஜ், வலுக்கட்டாயமாக வீட்டுக்குள் சென்றார். அந்த சமயத்தில், சில பத்திரிகையாளர்களும் உள்ளே சென்றனர்.
வீட்டு வளாகத்தில் இருந்த நடிகர் மோகன் பாபுவிடம், பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதனால் கோபமடைந்த மோகன் பாபு, பத்திரிகையாளரின் மைக்கை பிடுங்கி அவரது தலையில் தாக்கினார். இதில் பத்திரி கையாளர் காயமடைந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
காயமடைந்த பத்திரிகையாளருக்கு, கன்னத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர் போலீசில் புகார் அளித்தார். இதன்படி வழக்கு பதிந்த போலீசார், விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகர் மோகன் பாபுவுக்கு சம்மன் அனுப்பினர்.
இந்நிலையில் நேற்று நடிகர் மஞ்சு மனோஜ் கூறுகையில், ''சொத்து தகராறு தொடர்பான விபரங்களை விரைவில் வெளியிடுகிறேன்; பத்திரிகையாளர் தாக்கப்பட்டதற்கு மன்னிப்பு கேட்கிறேன்,'' என்றார்.
இதற்கிடையே, ஹைதராபாதில் உள்ள பிலிம் சேம்பர் அலுவலகம் முன், பத்திரிகையாளர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். நடிகர் மோகன் பாபு மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யக் கோரிய அவர்கள், திரைப்பட நடிகர்கள் சங்கத்தில் இருந்து அவரை வெளியேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இந்த சங்கத்தின் தலைவராக, நடிகர் மோகன் பாபுவின் மூத்த மகனும், நடிகருமான மஞ்சு விஷ்ணு உள்ளார். இச்சம்பவத்துக்கு பின், உடல் வலி, உயர் ரத்த அழுத்தம், கழுத்து வலி போன்ற பிரச்னைகளுடன் நடிகர் மோகன் பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.