பள்ளி மாணவி பிரசவம்; எட்டாம் வகுப்பு மாணவர் மீது வழக்கு
பள்ளி மாணவி பிரசவம்; எட்டாம் வகுப்பு மாணவர் மீது வழக்கு
UPDATED : பிப் 01, 2025 05:43 AM
ADDED : பிப் 01, 2025 02:12 AM

மூணாறு:கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பனையில் தனியார் மருத்துவமனையில் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஆண் குழந்தையை பிரசவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கட்டப்பனை அருகே சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோர் வசித்தனர். அவர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தாயார் பிரிந்து சென்றார். தந்தையுடன் வசித்த மாணவி விடுமுறை நாட்களில் தாயார் வீட்டிற்கு செல்வதுண்டு. அவ்வாறு கடந்த கோடை விடுமுறையில் தாயார் வீட்டிற்கு சென்ற மாணவி, பள்ளி திறந்ததவுடன் தந்தை வீட்டிற்கு திரும்பியவர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று வந்தார்.
கர்ப்பம்: இரு தினங்களுக்கு முன்பு மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால், கட்டப்பனையில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நடந்த பரிசோதனையில் மாணவி நிறைமாத கர்ப்பம் என தெரியவந்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. கட்டப்பனை போலீசார் மாணவியிடம் விசாரித்த போது கடந்த கோடை விடுமுறையில் தாயார் வீட்டிற்கு சென்ற போது, அப்பகுதியை சேர்ந்த உறவினரான 14 வயதுடைய எட்டாம் வகுப்பு மாணவருடன் நெருங்கி பழகியதால் கர்ப்பம் அடைந்ததாக தெரியவந்தது. சம்பந்தப்பட்ட மாணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பிரசவம்: நேற்று முன்தினம் அதிகாலை மாணவிக்கு நடந்த பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை ஏற்றுக் கொள்ள மாணவியின் உறவினர்கள் மறுத்து விட்டதால், மருத்துவமனை நிர்வாகம் குழந்தையை பராமரித்து வருகின்றது. சம்பந்தப்பட்ட மாணவி ஓரிரு நாட்களில் குழந்தைகள் நல குழுவிடம் ஆஜராக உள்ளார். அப்போது மாணவியிடம் பேச்சு வார்த்தை நடத்தி குழந்தை குறித்து முடிவு செய்யவும், மாணவரை சிறுவர் மறுவாழ்வு மையத்தில் அனுமதிப்பதற்கும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.