பி.எம்.டி.சி., ஓட்டுனர்கள் மீது வழக்கு ரூ.21.44 லட்சம் அபராதம் வசூல்
பி.எம்.டி.சி., ஓட்டுனர்கள் மீது வழக்கு ரூ.21.44 லட்சம் அபராதம் வசூல்
ADDED : ஜன 14, 2024 11:46 PM

பெங்களூரு: போக்குவரத்து விதிகளை மீறிய, பி.எம்.டிசி., ஓட்டுனர்கள் மீதும் வழக்கு பதிவாகிறது. 2023ம் ஆண்டில் 3,271 வழக்குகள் பதிவாகியுள்ளன. வழக்கு தொடர்பாக, பி.எம்.டி.சி., ஓட்டுனர்களிடம் 21.44 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
போக்குவரத்து போலீசார் மட்டுமின்றி, பி.எம்.டி.சி.,யின் 'சாரதி' ரோந்து வாகன ஊழியர்களும், போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோரை கண்டுபிடித்து, நோட்டீஸ் அளிக்கின்றனர். விதிமுறைளை மீறும் வாகன பயணியரிடம், அபராதம் வசூலிக்கின்றனர். அபராதம் செலுத்தியவர்களில், பி.எம்.டி.சி., ஓட்டுனர்களும் உள்ளனர்.
பி.எம்.டி.சி., ஓட்டுனர்கள், போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதை கட்டுப்படுத்தும் நோக்கில், சமீபத்தில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து, போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் ஒருங்கிணைப்பில், ஓட்டுனர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனாலும், இவர்கள் விதிமுறைகளை மீறுவது நிற்கவில்லை.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரின் சாலைகளில், சிக்னலை தாண்டி அதிவேகமாக பஸ்களை ஓட்டுகின்றனர். இதனால் விபத்துகள் அதிகரிக்கின்றன. 2019 முதல் 2023 வரையிலான காலத்தில், பி.எம்.டி.சி., பஸ்களால் நடந்த விபத்துகளில், 156 பேர் உயிரை இழந்தனர். 413 பேர் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் சேர்ந்தனர். 2023ல் 32 பேர் உயிரிழந்தனர். 97 பேர் காயமடைந்தனர்.
சிக்னல் ஜம்ப், சாலை நடுவில் பஸ்களை நிறுத்துவது, பஸ் ஓட்டும் போது மொபைல் போன் பயன்படுத்தியது, தடை செய்யப்பட்ட இடங்களில் பஸ்களை நிறுத்தியது, பஸ் ஓட்டும் போது கதவை மூடாதது உட்பட, பல்வேறு வகைகளில் விதிகளை மீறுகின்றனர்.
இத்தகைய ஓட்டுனர்கள் மீது, வழக்கு பதிவாகிறது. கடந்தாண்டு 3,271 வழக்குகள் பதிவாகின. இவர்களிடம் 21.44 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.