ADDED : டிச 15, 2024 11:09 PM

காமாட்சிபாளையா: இருசக்கர வாகனம் மீது அரசு பஸ் மோதியதால், கோபமடைந்த பெண், ஓட்டுனரை சரமாரியாக தாக்கியதால், போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
பெங்களூரு ஜாலஹள்ளி கிராசில் இருந்து கே.ஆர்.மார்க்கெட்டிற்கு பி.எம்.டி.சி., மின்சார பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் ஓட்டுனர் அம்பரிஷ், நடத்துனர் யோகேஷ் பணியில் இருந்தனர்.
சுமனஹள்ளி மேம்பாலம் அருகே வரும்போது, இரு சக்கர வாகனத்தில் பஸ் மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தில் இருந்த காமாட்சிபாளையாவை சேர்ந்த சவிதா, தனது இரு குழந்தைகளுடன் கீழே விழுந்தார்.
கீழே விழுந்தவர்களை, அங்கிருந்தவர்கள் எழுப்பி நிற்க வைத்தனர். குழந்தைகள் கீழே விழுந்ததால் கோபமடைந்த சவிதா, பஸ்சுக்குள் ஏறி, ஓட்டுனர் அம்பரிஷை தாக்கி கீழே தள்ளி, காலால் மிதித்தார்.
இதனால் ஓட்டுனர் மயக்கம் அடைந்தார். அவரை இருக்கையில் அமர வைத்தனர். அங்கிருந்தோர் சவிதாவை சமாதானப்படுத்தி, பஸ்சில் இருந்து கீழே இறக்கினர். ஓட்டுனரை தாக்கியதாக பி.எம்.டி.சி., நிர்வாகத்தினர், காமாட்சிபாளையா போலீசில் புகார் செய்து உள்ளனர். சவிதா மீது வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.
ஓட்டுனரை, அப்பெண் தாக்கும் வீடியோ, பஸ்சில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.