நீதிபதி யஷ்வந்த் வர்மா பணி நீக்க தீர்மானம்: மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு
நீதிபதி யஷ்வந்த் வர்மா பணி நீக்க தீர்மானம்: மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு
ADDED : ஜூலை 09, 2025 03:00 PM

புதுடில்லி: தலைநகர் டில்லியில் உள்ள வீட்டில், தீயில் பாதி எரிந்த நிலையில் மூட்டை மூட்டையாக ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பணி நீக்கும் செய்யும் மத்திய அரசின் தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்பதாக எதிர்க்கட்சிகள் உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் யஷ்வந்த் வர்மா. இவரது வீட்டில் கடந்த மார்ச் மாதம் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் சென்று தீயை அணைத்தபோது, வீட்டின் ஒரு அறையில், பாதி எரிந்த நிலையில், மூட்டை மூட்டையாக 500 ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இது, நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முறைகேடாக சம்பாதித்த பணத்தையே நீதிபதி வர்மா பதுக்கி வைத்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது; அதை அவர் மறுத்தார். எனினும், அவரை அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாற்றம் செய்தார். அங்கு அவருக்கு பணி ஒதுக்க வேண்டாம் என்றும், அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அறிவுறுத்தினார்.
மேலும், நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் சிக்கிய விவகாரம் குறித்து விசாரிக்க, குழு ஒன்றை உச்ச நீதிமன்றம் அமைத்தது. டில்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா, டில்லி தீயணைப்பு படை தலைவர் அதுல் கார்க் உள்ளிட்ட 50 பேரிடம் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அவரை பதவியில் இருந்து நீக்கும்படி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், வர்மாவை பதவி நீக்குவது அவ்வளவு எளிதல்ல. பார்லிமென்டில் அவர் மீது, 'இம்பீச்மென்ட்' எனப்படும், பணி நீக்க தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.
தீர்மானத்தை கொண்டு வருவதற்கு, லோக்சபாவில், 100 எம்.பி.,க்களின் ஆதரவும், ராஜ்யசபாவில், 50 எம்.பி.,க்களின் ஆதரவும் தேவை. இதற்கான பணிகள் துவங்கி உள்ளன. வரும் பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 21 முதல் ஆக., 22 வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் பணி நீக்க தீர்மானம் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து விசாரணைக் குழு அமைக்கப்படும்.
இந்நிலையில், யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக பணி நீக்க தீர்மானம் கொண்டு வரும் மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவு அளிப்பதாக எதிர்க்கட்சிகள் உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், பணி நீக்க தீர்மானம் எளிதாக நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.