ரூ.820 கோடி பரிவர்த்தனை மோசடி 67 இடங்களில் சி.பி.ஐ., சோதனை
ரூ.820 கோடி பரிவர்த்தனை மோசடி 67 இடங்களில் சி.பி.ஐ., சோதனை
ADDED : மார் 07, 2024 11:34 AM
புதுடில்லி, யுகோ வங்கியில் உள்ள கணக்குகளுக்கு, 820 கோடி ரூபாய் அளவுக்கு பணப் பரிவர்த்தனை நடந்த மோசடி தொடர்பாக, ராஜஸ்தான், மஹாராஷ்டிராவில், 67 இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
யுகோ வங்கியில் உள்ள 41,000 கணக்குகளுக்கு, கடந்தாண்டு நவ., 10 முதல் 13ம் தேதிக்குள், 8.53 லட்சம், ஐ.எம்.பி.எஸ்., எனப்படும் உடனடி பணப் பரிவர்த்தனை முறையில் 820 கோடி ரூபாய் வந்துள்ளது.
நாடு முழுதும் உள்ள ஏழு தனியார் வங்கிகளின், 14,600 கணக்குகளில் இருந்து இந்த தொகை அனுப்பப்பட்டது. அந்த வங்கிகளின் கணக்குகளில் இருந்து பணம் எடுக்கப்படவில்லை. ஆனால், யூகோ வங்கியில் உள்ள கணக்குகளுக்கு பணம் வந்துள்ளது.
இந்த மோசடி தொடர்பாக, யுகோ வங்கி அளித்த புகாரின் அடிப்படையில் சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இதற்கிடையே பணம் வந்த கணக்கை வைத்துள்ளவர்கள், அந்த பணத்தை பல வகைகளில் எடுத்துள்ளனர்.
கடந்தாண்டு டிசம்பரில் யுகோ வங்கியின் கோல்கட்டா, மங்களூரில் உள்ள அதிகாரிகள் மற்றும் சில தனிநபர்களின் இடங்கள் என, 13 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, ராஜஸ்தான், மஹாராஷ்டிராவில், 67 இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். பணம் கிடைக்கப் பெற்றவர்களுடைய இடங்களிலும் இந்த சோதனை நடந்தது.
இந்த சோதனையின்போது, பல முக்கிய ஆவணங்கள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. சந்தேகத்தின் அடிப்படையில், 30 பேரிடம் விசாரணை நடந்து வருவதாக சி.பி.ஐ., தெரிவித்து உள்ளது.

