சி.பி.ஐ., விசாரணை: பாலகிருஷ்ணா "ஆப்சென்ட்' பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் உற்சாகம்
சி.பி.ஐ., விசாரணை: பாலகிருஷ்ணா "ஆப்சென்ட்' பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் உற்சாகம்
ADDED : ஆக 05, 2011 12:36 AM
டேராடூன் : யோகா குரு ராம்தேவின் சீடர் பாலகிருஷ்ணா, தனது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதால், சி.பி.ஐ., விசாரணைக்கு நேற்று ஆஜராகவில்லை.
ராம்தேவின் சீடரான பாலகிருஷ்ணா, போலி ஆவணங்களைக் காட்டி பாஸ்போர்ட் பெற்றுள்ளதாக சி.பி.ஐ., அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. பாலகிருஷ்ணாவின் பள்ளிச் சான்றிதழில் அவருடைய பெற்றோர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என்று உள்ளது. பல்கலைக்கழக சான்றிதழில் அவருடைய பெற்றோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என, குறிப்பிடப்பட்டுள்ளது.
போலியான ஆவணங்களை தாக்கல் செய்து பாஸ்போர்ட் பெற்றது தொடர்பாக சி.பி.ஐ., அவரை தேடி வந்தது. இந்நிலையில், அவர் கடந்த மாதம் 25ம் தேதி, ஹரித்துவாரில் உள்ள திவ்ய யோகா மந்திரிலிருந்து காணாமல் போய்விட்டார்.
'அவரை இம்மாதம் 29ம் தேதி வரை கைது செய்யக்கூடாது' என ஐகோர்ட், சி.பி.ஐ.,க்கு தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. எனினும் சி.பி.ஐ., விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி, பாலகிருஷ்ணாவை கோர்ட் கேட்டுள்ளது. இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் பாலகிருஷ்ணா சி.பி.ஐ., விசாரணைக்காக ஆஜரானார். ஆனால், நேற்று அவர் சி.பி.ஐ., விசாரணைக்கு வரவில்லை. 'பாஸ்போர்ட் தொடர்பான வேலை இருந்ததால் விசாரணைக்கு வர முடியவில்லை' என, சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு அவர் பேக்ஸ் மூலம் செய்தி அனுப்பியுள்ளார். ஆனால், பாலகிருஷ்ணா நேற்று, தனது 40வது பிறந்த நாளை ஹரித்துவாரில் உள்ள பதஞ்சலி யோகபீடத்தில் கொண்டாடினார். இதையொட்டி, ரிக்வேத வேள்வி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.