சி.பி.எஸ்.இ., 8ம் வகுப்பு புதிய பாட புத்தகம்: பாபர், அக்பர் அட்டூழியங்கள் விவரிப்பு
சி.பி.எஸ்.இ., 8ம் வகுப்பு புதிய பாட புத்தகம்: பாபர், அக்பர் அட்டூழியங்கள் விவரிப்பு
ADDED : ஜூலை 17, 2025 01:27 AM

புதுடில்லி : சி.பி.எஸ்.இ., 8ம் வகுப்புக்கு புதிதாக வெளியிடப்பட்டுள்ள சமூக அறிவியல் பாட புத்தகத்தில், டில்லி சுல்தான் மற்றும் முகலாயர்கள் ஹிந்துக்களுக்கு எதிராக நிகழ்த்திய அட்டூழியங்கள் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன.
பள்ளி சமூக அறிவியல் பாட புத்தகங்களில் முகலாயர்கள், சுல்தான்கள் உள்ளிட்ட முஸ்லிம் மன்னர்கள் குறித்த பாடங்களில், அவர்கள் கட்டிய வரலாற்று சிறப்புமிக்க கட்டடங்கள், வென்ற போர்கள் குறித்து உயர்வான கருத்துக்கள் மட்டுமே இதுவரை இடம் பெற்றுவந்தன.
கொடுமைகள்
இந்நிலையில், சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பள்ளிகளின், 8ம் வகுப்புக்கான புதிய சமூக அறிவியல் பாட புத்தகத்தை என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் சமீபத்தில் தயாரித்து வெளியிட்டுள்ளது.
அதில், அக்பர், பாபர், அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக நடந்த கொடுமைகள் விவரிக்கப்பட்டுள்ளன.
'எக்ஸ்ப்ளோரிங் சொசைட்டி: இந்தியா அண்டு பியாண்ட்' என்ற தலைப்பில் வெளியாகி உள்ள இந்த புத்தகத்தில், 'வரலாற்றின் சில இருண்ட பக்கங்கள்' என்ற சிறப்பு குறிப்புடன் சில பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
அதில், டில்லி சுல்தான்களின் எழுச்சி, வீழ்ச்சி பற்றியும் அவர்களை எதிர்த்து நின்ற விஜயநகர பேரரசு, மராட்டியர்கள் மற்றும் சீக்கியர்களின் எழுச்சி பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது. ஹிந்துக்களுக்கு எதிராக மாலிக் கபூர் செயல்பட்டதாகவும், அவர் மதுரை, ஸ்ரீரங்கம், சிதம்பரம் கோவில்களை அழித்தவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆட்சி கொடூரம்
முதல் முகலாய மன்னரான பாபர் மக்களை அழித்து, அவர்களின் மண்டை ஓடுகள் மீது தன் சாம்ராஜ்யத்தை நிறுவியதாக விவரிக்கப்பட்டுள்ளது.
'அக்பரின் ஆட்சி கொடூரமும், சகிப்புத்தன்மையும் கலந்ததாக இருந்தது. கோவில்கள் சூறையாடப்பட்டன. ராஜஸ்தானின் சித்தோர்கரில், 30,000 பேர் படுகொலை செய்யப்பட்டனர். கோவில்கள், குருத்வாராக்களை அழித்தவர் அவுரங்கசீப்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே சமயம், இந்த வரலாற்று நிகழ்வுகளுக்கும், தற்போது இருக்கும் சமூகங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற முன்னெச்சரிக்கை வாசகமும் அந்த பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.