ADDED : மார் 04, 2026 03:32 AM

புதுடில்லி: மேற்காசிய நாடுகளில், போர் பதற்றம் தொடர்வதால், அந்நாடுகளில் சி.பி.எஸ்.இ., நடத்தும், 10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்தியர்கள் அதிகம் பணிபுரியும், பஹ்ரைன், ஈரான், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில், மத்திய கல்வி அமைச்சகத்தின் சார்பில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின் பாடத்திட்டத்தில், இணைப்பு பள்ளிகள் செயல்படுகின்றன.
தற்போது, அந்த நாடுகளில் போர் பதற்றம் நீடிக்கும் நிலையில், அந்நாடுகளில் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர்களுக்கு, சி.பி.எஸ்.இ., தேர்வு கட்டுப்பாட்டாளர் சான்யம் பரத்வாஜ் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
மேற்காசிய நாடுகளின் சில பகுதிகளில் நிலவும், தற்போதைய நிலைமையை ஆய்வு செய்த பின், நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கவிருந்த 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன.
மீண்டும் நிலைமையை பரிசீலித்து, 7ம் தேதி முதல் நடக்க உள்ள தேர்வுகள் குறித்து முடிவுகள் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கை, அந்த நாடுகளில் உள்ள இந்திய துாதர்கள், துணைத்துாதர்கள், சி.பி.எஸ்.இ., மண்டல அலுவலகத்துக்கும் அனுப்பப்பட்டு உள்ளது.

