மத்திய பட்ஜெட்: வரி விகித மாற்றத்தால் சாதக, பாதகங்கள் என்னென்ன?
மத்திய பட்ஜெட்: வரி விகித மாற்றத்தால் சாதக, பாதகங்கள் என்னென்ன?
ADDED : ஜூலை 23, 2024 06:16 PM

புதுடில்லி: மத்திய பட்ஜெட்டில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு திட்டங்களையும், வரி விகிதங்களில் மாற்றம் செய்தும் அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், வரி விகித மாற்றங்களால் தங்கம், வெள்ளி விலை குறைவு, மைனர்களுக்கும் பென்சன் திட்டம், வருமான வரியில் நிலையான கழிவு தொகை அதிகரிப்பு போன்ற பல சாதகமான அம்சங்கள் கிடைக்க உள்ளன.
சாதகங்கள்
* புதிய வருமான வரி திட்டத்தில் வரி வகைப்பாடு (ஸ்லாப்) மாற்றப்பட்டு, ரூ.3 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி பிடித்தம் இல்லை.
* வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு நிலையான கழிவு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
* ஓய்வூதியதாரர்களுக்கான நிலையான கழிவு ரூ.10 ஆயிரமாக இருந்த நிலையில் ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
* என்.பி.எஸ் எனப்படும் தேசிய பென்சன் திட்டக் கணக்கில் முதலாளியின் பங்களிப்பின் மீதான விலக்கு, அரசு ஊழியர்களுக்கு இணையாக 10 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
* நீண்ட கால பங்கு மூலதன ஆதாயத்திற்கான விலக்கு ரூ.1.25 லட்சமாக உயர்த்தப்பட்டது. இது முன்பை விட ரூ.25 ஆயிரம் அதிகம்.
* வரிவிதிப்பு நோக்கங்களுக்காக குறுகிய கால அல்லது நீண்ட கால மூலதன ஆதாயங்களை நிர்ணயிக்க வைத்திருக்கும் காலம் எளிமைப்படுத்தப்படுகிறது.
* நீண்டகால முதலீட்டு வருவாய் வரி (எல்.டி.சி.ஜி) 20 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
* மைனர்களுக்கு தேசிய பென்சன் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
* பழைய வருமான வரிக் கணக்கை மறுமதிப்பீடு செய்வதற்கான கால வரம்பு குறைக்கப்பட்டுள்ளது.
* சுங்க வரி குறைப்பு காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையும்.
பாதகங்கள்
* குறுகியகால முதலீட்டு வருவாய் வரி (எஸ்.டி.சி.ஜி) வரி விகிதம் 15 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
* சொத்து, தங்கம் மற்றும் பிற குறிப்பிட்ட சொத்துக்களை விற்றால் கிடைக்கும் குறியீட்டு பலன் நீக்கப்பட்டுள்ளது.
* இனிமேல் வரியைச் சேமிக்க ஒருவர் வீட்டு வாடகை மூலம் பெற்ற வருமானத்தை வணிக வருமானமாக அறிவிக்க முடியாது.
* பங்கு பத்திர பரிவர்த்தனை வரி (எஸ்.டி.டி) 0.02 சதவீதத்தில் இருந்து 0.1 சதவீதமாக உயர்த்தப்பட்டது.