குளிர்காலத்தில் அதிகரிக்கும் காற்று மாசு மாநில அரசுக்கு மத்திய குழு அறிவுறுத்தல்
குளிர்காலத்தில் அதிகரிக்கும் காற்று மாசு மாநில அரசுக்கு மத்திய குழு அறிவுறுத்தல்
ADDED : டிச 14, 2024 09:42 PM

புதுடில்லி:தேசியத் தலைநகர் பிராந்தியம் மற்றும் அண்டை மாநிலங்களில் குளிர்கால காற்று மாசை கட்டுக்குள் வைக்க, கட்டுப்பாடுகளை கடுமையாக்க மத்தியக் குழு அறிவுறுத்தியுள்ளது.
தலைநகர் டில்லி மற்றும் அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காற்றின் தரம் மோசமான நிலையில் நீடிக்கிறது.
பொதுவாகவே குளிர்காலமான நவம்பர் முதல் ஜனவரி வரை காற்று மாசு மோசமான நிலையில் இருந்தாலும், அதன் தரம் மேலும் மோசமான நிலைக்கு செல்வதை தடுக்க கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகிறது.
தற்போது, குளிர்காலம் உச்சகட்ட நிலையில் இருப்பதால், திருத்தப்பட்ட கட்டுப்பாடுகளை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
அண்டை மாநிலங்களில் இருந்து டில்லி வரும் மின்சாரம் மற்றும் காஸ் ஆகியவற்றில் இயங்கும் பஸ்களை மட்டுமே டில்லிக்குள் அனுமதிக்க வேண்டும். அதேநேரத்தில், பாரத் ஸ்டேஜ் - 4 வகையைச் சேர்ந்த டீசல் பஸ்களை அனுமதிக்கலாம். இவற்றைத் தவிர பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வெளிமாநில பஸ்களை டில்லிக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது. இந்தக் கட்டுப்பாடு ஏற்கனவே மூன்றாம் கட்டத்தில் அமலில் இருந்தது. அதை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
துப்புரவு, தோட்டப் பராமரிப்பு தொழிலாளர்கள் குப்பைகளை திறந்த வெளியில் எரிப்பதைத் தடுக்க மின்சார ஹீட்டர்களை குடியிருப்போர் நலச் சங்கங்கள் வழங்க வேண்டும்.
பாரத் ஸ்டேஜ் -4 வகையைச் சேர்ந்த பெட்ரோல் மற்றும் டீசல் கார்கள் டில்லி, குருகிராம், பரிதாபாத், காஜியாபாத் மற்றும் உ.பி.,யின் கவுதம் புத்தா நகர் மாவட்டம் ஆகிய இடங்களில் இயக்க, மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.
அதேபோல, காற்று மாசு தடுப்பு மூன்றாம் கட்டத்தின் கீழ், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைக்கான வாகனங்களைத் தவிர, மற்ற பாரத் ஸ்டேஜ் -4 டீசல் சரக்கு வாகனங்களுக்கு டில்லியில் தடை விதிக்க வேண்டும்.
மேலும், டில்லிக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட பாரத் ஸ்டேஜ் - 4 டீசல் இலகுரக வணிக வாகனங்களையும் அனுமதிக்கக் கூடாது.
டில்லி, குருகிராம், பரிதாபாத், காஜியாபாத் மற்றும் கவுதம் புத்தா நகர் மாவட்டம் ஆகிய இடங்களில் ஐந்தாம் வகுப்பு வரை 'ஆன் - லைன்' வாயிலாக வகுப்பு நடத்தலாம். அரசு அலுவலகத்துக்கும் பணி நேரத்தை மாற்றி அமைக்கலாம்.