ADDED : ஜன 31, 2026 11:54 PM
புதுடில்லி: பயனர்களின் மொபைல் போன்களை பயன்படுத்தி, பெரிய அளவில் போலி குறுந்தகவல்களை அனுப்பி இணைய மோசடிகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்ததை அடுத்து, 'விங்கோ' என்ற மொபைல் போன் செயலியை மத்திய அரசு தடை செய்துள்ளது.
பகுதிநேர வேலை என்ற பெயரில் இணைய மோசடிகளில் ஈடுபடுவதற்காக மொபைல் போன் செயலிகள் உருவாக்கப்படுவது அதிகரித்து வருகின்றன.
அது போன்ற ஒரு செயலி தான் விங்கோ. இதை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தினால் சிறு தொகை தினமும் வழங்கப்படும் என, விளம்பரம் செய்யப்பட்டது.
இந்நிலையில், பயனர்களின் மொபைல் போன்களை பயன்படுத்தி, 'விங்கோ' செயலி போலி எஸ்.எம்.எஸ்., அனுப்பியதாக புகார் எழுந்தது.
இதை, 'ஐ4சி' எனப்படும், இந்திய சைபர் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம் விசாரித்தது. விசாரணையில், செயலியை பதிவிறக்கம் செய்தவர்கள், தங்களுக்கு தெரியாமலேயே இணைய குற்றவாளிகள் நடத்தும் குறுந்தகவல் மோசடி வலையில் சிக்கியது தெரியவந்தது.
'விங்கோ' செயலி நிறுவப்பட்டதும், பயனரின் மொபைல் போனிலிருந்து தானாகவே குறுந்தகவல் செல்லும் அமைப்பு செயல்படத் துவங்கிவிடும். இந்த அமைப்பு மூலம், தினமும் 1.50 கோடி பேருக்கு மோசடி குறுந்தகவல்கள் சென்றுள்ளன.
தற்போது, மத்திய உள்துறை அமைச்சகமும் ஐ4சி அமைப்பும் இந்த செயலியை முடக்கியுள்ளன. இந்த செயலியை டெலிகிராம் மற்றும் யு டியூப் வாயிலாக விளம்பரப்படுத்திய சேனல்களும் முடக்கப்பட்டுள்ளன.

