இந்தியாவிற்கு எதிரான விரோதப்போக்கு: அமெரிக்க நாளிதழுக்கு மத்திய அரசு கண்டனம்
இந்தியாவிற்கு எதிரான விரோதப்போக்கு: அமெரிக்க நாளிதழுக்கு மத்திய அரசு கண்டனம்
ADDED : ஜன 03, 2025 07:42 PM

புதுடில்லி: '' அமெரிக்காவைச் சேர்ந்த வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை மற்றும் அதன் நிருபர் இந்தியாவிற்கு எதிராக விரோதப்போக்கை வெளிப்படுத்துகின்றனர், '' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த 'வாஷிங்டன் போஸ்ட்' என்ற நாளிதழ் சில நாட்களுக்கு முன்னர் செய்தி ஒன்றை வெளியிட்டது.
அதில், மாலத்தீவு அதிபராக இருக்கும் முயிசுவை தகுதி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் கொண்டு வர , அவரது கட்சி எம்.பி.,க்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என அந்நாட்டு எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி இந்தியாவிடம் கேட்டது எனக் கூறப்பட்டு இருந்தது. மேலும், பாகிஸ்தானுக்குள் புகுந்து லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாதிகளை இந்தியா கொன்று வருவதாகவும் கூறப்பட்டு இருந்தது.
மாலத்தீவு தொடர்பான செய்திக்கு மாலத்தீவு எதிர்க்கட்சி மறுப்பு தெரிவித்தது. அது பற்றி தங்களுக்கு தெரியாது. மாலத்தீவின் ஜனநாயக நடவடிக்கைகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாக கூறியது.
இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: பத்திரிகை மற்றும் நிருபர் இருவருமே இந்தியா மீதான விரோதப் போக்கை வெளிப்படுத்துவதாகவே நாங்கள் கருதுகிறோம். அவர்களின் நடவடிக்கையை அனைவரும் பார்க்க வேண்டும். அவர்களின் நம்பகத்தன்மையை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் எனக்கூறினார்.
பாகிஸ்தான் தொடர்பான கேள்விக்கு ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: பாகிஸ்தான் விவகாரத்தை பொறுத்தவரை அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ,' உங்கள் வீட்டு முற்றத்தில் பாம்பை வைத்துக் கொண்டு அது உங்கள் அண்டை வீட்டாரை மட்டும் கடிக்கும் என எதிர்பார்க்கக்கூடாது' எனக்கூறியதை நினைவுபடுத்துகிறேன் என தெரிவித்தார்.