அதிகமான உப்பு நுகர்வு குறித்து மத்திய அரசு தீவிர விழிப்புணர்வு:ராஜ்யசபாவில் ஜே.பி. நட்டா தகவல்
அதிகமான உப்பு நுகர்வு குறித்து மத்திய அரசு தீவிர விழிப்புணர்வு:ராஜ்யசபாவில் ஜே.பி. நட்டா தகவல்
ADDED : பிப் 03, 2026 05:07 PM

புதுடில்லி: மக்களிடையே ரத்த அழுத்தம், இதய நோய்கள் அதிகரித்து வருவதைத் தடுக்க, அதிகப்படியான உப்பு நுகர்வு குறித்த விழிப்புணர்வை மத்திய அரசு தீவிரமாகப் பரப்பி வருகிறது என்று ராஜ்யசபாவில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்தார்.
ராஜ்யசபாவில் ஆரோக்கியமான உணவுப்பழக்கம் குறித்து எதிர்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு
ஜே.பி. நட்டா பதிலிளித்த போது கூறியதாவது:
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் மூலம் சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக ஆரோக்கியமான உணவுப் பழக்கம் குறித்த விழிப்புணர்வு வழங்கப்படுகிறது.
உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பு ஆகியவற்றின் பயன்பாட்டைக் குறைக்க பிரத்யேகப் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.இந்தியர்கள் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த அளவை விட (ஒரு நாளைக்கு 5 கிராம்) கிட்டத்தட்ட இரண்டு மடங்கு (சுமார் 9.2 கிராம்) உப்பை உட்கொள்வதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
அதன்படி,ஒரு நாளைக்கு 5 கிராமுக்கும் குறைவான உப்பையே பயன்படுத்த வேண்டும். மேலும், உப்பைக் குறைக்கும் முயற்சியில் பொட்டாசியம் கலந்த 'லோ-சோடியம்' உப்பைப் பயன்படுத்துவோர், கர்ப்பிணிகள் அல்லது சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களாக இருந்தால் மருத்துவர் ஆலோசனையின்றி அதைப் பயன்படுத்தக் கூடாது.
சத்தான உணவுப் பழக்கவழக்கங்களை ஊக்குவிக்கவும், அதிகப்படியான உப்பு நுகர்வின் தீங்கு விளைவிக்கும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் மூலம் மத்திய அரசு, 'சரியாக உண்ணுங்கள் இந்தியா' இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது.இவ்வாறு ஜே.பி.நட்டா கூறினார்.

