எல்.பி.ஜி., உற்பத்தி நிறுவனங்களுக்கு முதல்முறையாக அளவு நிர்ணயம் மத்திய அரசு உத்தரவு
எல்.பி.ஜி., உற்பத்தி நிறுவனங்களுக்கு முதல்முறையாக அளவு நிர்ணயம் மத்திய அரசு உத்தரவு
ADDED : ஆக 16, 2026 10:50 PM

புதுடில்லி: நாட்டில் எல்.பி.ஜி., வினியோகம் பாதிக்கப்படும் நேரங்களில், உள்நாட்டு உற்பத்தியை உடனடியாக அதிகரிக்க, பொதுத்துறை மற்றும் தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு முதல் முறையாக உற்பத்தி இலக்கை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.
இது குறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்ததாவது:
மொத்தம் 21 சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் எண்ணெய், எரிவாயு உற்பத்தி நிறுவனங்களுக்கு தினசரி அதிகபட்ச உற்பத்தி அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை சேர்த்து தினமும், 63,810 டன் எல்.பி.ஜி., உற்பத்தி செய்யும் வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
மேற்காசிய போர் பதற்றத்தால் இறக்குமதி பாதிக்கப்பட்டதை அடுத்து, நாட்டின் எல்.பி.ஜி., தேவைக்கு வெளிநாடுகளை அதிகம் சார்ந்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் வினியோக தடை ஏற்பட்டாலும் வீட்டு உபயோக எல்.பி.ஜி., கிடைப்பதில் சிக்கல் ஏற்படாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜாம்நகர் சுத்திகரிப்பு ஆலைக்கு தினமும் 18,000 டன் உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் உள்நாட்டு எல்.பி.ஜி., உற்பத்தி ஆண்டுக்கு 1.31 கோடி டன்னாக உள்ளது. தினசரி அடிப்படையில் இது கிட்டத்தட்ட 35,900 டன்.
இதில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் 18 சுத்திகரிப்பு ஆலைகளுக்கு தினமும் மொத்தம் 31,470 டன் எல்.பி.ஜி., உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த உற்பத்தி அட்டவணை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பரிசீலிக்கப்படும், என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
