கவர்னருக்கு எதிரான மனு வாபஸ்: கேரளாவுக்கு மத்திய அரசு எதிர்ப்பு
கவர்னருக்கு எதிரான மனு வாபஸ்: கேரளாவுக்கு மத்திய அரசு எதிர்ப்பு
ADDED : மே 07, 2025 12:15 AM

புதுடில்லி: மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தாமதப்படுத்துவதாக கவர்னருக்கு எதிராக தொடரப்பட்ட மனுவைத் திரும்பப் பெறுவதாக, உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு கூறியதற்கு, மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்து உள்ளது.
கால நிர்ணயம்
தற்போது, பீஹார் கவர்னராக உள்ள முகமது ஆரிப் கான், கேரள கவர்னராக இருந்தபோது, மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பு செய்ததாக, கேரள அரசு வழக்கு தொடர்ந்தது.
இதற்கிடையே, இதேபோன்று கவர்னருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் ஏப்., 8ல் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க கவர்னருக்கு கால நிர்ணயம் செய்யப்பட்டது.
மேலும், கவர்னர் அனுப்பும் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஜனாதிபதிக்கும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.
கேரள அரசு கடந்த ஏப்., 22ல் தொடர்ந்த வழக்கு, விசாரணைக்கு வந்தபோது, 'தமிழக அரசு வழக்கின் தீர்ப்பே இந்த வழக்குக்கும் பொருந்தும்' என, கேரள அரசு தரப்பில் கூறப்பட்டது. இதற்கு, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா எதிர்ப்பு தெரிவித்தார்.
'இரண்டு வழக்குகளும் வெவ்வேறானவை' என அவர் வாதிட்டார். அதைத் தொடர்ந்து, தமிழக அரசு வழக்கின் உத்தரவு கேரள அரசு வழக்குக்கும் பொருந்துமா என்பதை ஆய்வு செய்வதாக, உச்ச நீதிமன்ற அமர்வு கூறியிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜாய்மால்யா பகிச்சி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, “மசோதாக்களை, ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பி வைத்து விட்டதால், கவர்னருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை திரும்பப் பெறுகிறோம்,” என, கேரள அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் குறிப்பிட்டார்.
ஒத்திவைப்பு
இதற்கு, எதிர்ப்பு தெரிவித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “அரசியலமைப்பு சட்ட அதிகாரம் தொடர்புடையது என்பதால், இஷ்டத்துக்கு வழக்கு தொடர்வதும், இஷ்டத்துக்கு திரும்பப் பெறுவதையும் ஏற்க முடியாது,” என, வாதிட்டார்.
மனுவைத் திரும்பப் பெறுவதற்கு கேரள அரசுக்கு உரிமை உள்ளது என்று கூறிய அமர்வு, விசாரணையை 13ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.