UPDATED : ஜன 07, 2024 05:20 AM
ADDED : ஜன 07, 2024 01:47 AM

புதுடில்லி, இந்திய தயாரிப்பு இருமல் மருந்துகளால் உயிரிழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளதைத் தொடர்ந்து, இதை தயாரிக்கும் நிறுவனங்கள் தரத்தை உறுதி செய்வதற்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளை எடுத்துக் கொண்டதால், மேற்கு ஆப்ரிக்க நாடான காம்பியா, மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தான், மத்திய ஆப்ரிக்க நாடான கேமரூனில், 2022ல், 141 குழந்தைகள் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக, உலக சுகாதார அமைப்பு மற்றும் இந்த நாடுகளின் சுகாதாரத் துறைகள் கவலையை வெளிப்படுத்தின.
மருந்து தயாரிப்பில், நம் நாடு முன்னிலையில் உள்ளது. உலகளவில், நம் நாட்டின் மருந்து விற்பனை சந்தை, 4.15 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
இந்நிலையில், சர்வதேச அரங்கில் நம் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மீதான எதிர்மறையான எண்ணங்களை மாற்றும் வகையில், மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன்படி, மருந்துகளின் தரத்தை உறுதி செய்வதை கடுமையாக பின்பற்றும்படி, மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுஉள்ளது.
மருந்துகளுக்கு தேவையான மூலப் பொருட்களில் துவங்கி, தயாரிப்பின் ஒவ்வொரு கட்டத்திலும் தரத்தை உறுதி செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனைகள் செய்வதற்கு அதிக அளவில் மாதிரிகளை ஒதுக்கும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பெரிய நிறுவனங்கள், ஆறு மாதங்களுக்குள்ளும், சிறிய நிறுவனங்கள், 12 மாதங்களுக்குள்ளும் இதற்கு தேவையான வசதிகளை செய்யும்படி, மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆக., மாதம் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விபரங்களின்படி, 2022 டிச., வரை பல மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது.
நாடு முழுதும் உள்ள, 8,500 சிறிய மருந்து தயாரிப்பு ஆலைகளில், 25 சதவீதத்தில் போதிய தர பரிசோதனை வசதியில்லை என்பது தெரியவந்துள்ளது.